தென் சூடானில் பசியால் மயங்கி விழும் ஆசிரியர்கள்
தென் சூடானின் தெம்புரா மாவட்டத்தில் உள்ள ரென்சி ஆரம்பப்பள்ளியில் பணியாற்றும் இரண்டு ஆசிரியர்கள், பசியால் பள்ளிக்காலத்தில் மயங்கி விழுந்த சம்பவம் பதிவாகியுள்ளது.
இந்த சம்பவம், அந்த மாநிலத்தின் கல்வி மற்றும் மனிதாபிமான நெருக்கடியை வெளிப்படுத்தியுள்ளது.
இந்த துயர சம்பவம், மாநிலம் முழுவதும் அதிர்வலைகளை உருவாக்கியுள்ளதென தெரிவிக்கப்படுகின்றது.
“இந்த ஆசிரியர்கள் ஒரு நாளுக்கும் மேலாக சாப்பிடாமல் இருந்தனர் எனவும் உண்மையில் பசியில் வாடுகிறார்கள்” எனவும் மாநிலக் கல்வித் துறை அமைச்சர் கிரேஸ் அபொலோ முஸா கூறியுள்ளார்.
மயங்கி விழுந்த ஆசிரியர்கள் இருவரும் அருகிலுள்ள மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட போது கடுமையான ஊட்டச்சத்து குறைவால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பது கண்டறியப்பட்டுள்ளது.
இந்தச் சூழ்நிலை, கடந்த 17 மாதங்களாக ஆசிரியர்களுக்குப் பெற வேண்டிய ஊதியம் வழங்கப்படாததாலே ஏற்பட்டதென அமைச்சர் முஸா கூறியுள்ளார்.
தேசிய அரசு சம்பளத் தொகையை வங்கிகளுக்கு அனுப்பியதாகக் கூறினாலும், நிதி நெருக்கடி காரணமாக வங்கிகள் பணத்தை வழங்க முடியவில்லை என்கிறார்கள்.
“வங்கியில் பணம் இருப்பதாகச் சொல்லப்படுகிறது. ஆனால் நாங்கள் போனால், ‘பணம் இல்லை’ என வங்கி மேலாளர் பதிலளிக்கிறார்.
இதைச் சொல்லவே மனம் வருத்தமடைகிறது. ஆசிரியர்கள் மயங்குகிறார்கள். கல்வி முறை சிதறுகிறது,” என அவர் வேதனையுடன் தெரிவித்தார்.