மீனின் DNAவைக் கொண்டு காஃபி கப் தயாரித்த விஞ்ஞானிகள்!
சால்மன் மீனிலிருந்து விஞ்ஞானிகளால் காஃபி கப் தயாரிக்கப்பட்டுள்ளது. பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்துவது நிலத்தின் தன்மையை வீணடிக்கிறது. அதனால் பயோபிளாஸ்டிக்குகள் பயன்பாடு அதிகரித்து வருகிறது.
இந்நிலையில் இவற்றிற்கு மாற்றாக சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்படாத வண்ணம் சால்மன் மீனின் விந்தணுக்களிலிருந்து காஃபி கப்பை ஆராய்ச்சியாளர்கள் தயாரித்துள்ளனர்.
கிழக்கு சீனாவில் உள்ள டியான்ஜின் பல்கலைக்கழக விஞ்ஞானிகள் குழு, சால்மன் விந்தணுக்களில் இருந்து DNAவைக் கொண்டு சில ரசாயனங்களை கலந்து பயோபிளாஸ்டிக் கப்களை உருவாக்கியுள்ளனர்.
இவற்றை எளிதாக மறுசுழற்சி செய்து மீண்டும் பயன்படுத்தலாம் எனவும் கூறப்படுகின்றது. சால்மன் விந்தணுக்களிலிருந்து DNA இழைகள் தண்ணீரில் கரைக்கப்பட்டு, அயனோமர்களுடன் கலக்கப்பட்டு, பசை போன்று உருவாகி பல்வேறு வடிவங்களில் வடிவமைக்கக்கூடிய ஒரு ஜெல்லை உருவாக்குகிறது. இந்த செயல்முறையை விஞ்ஞானிகள் “அக்வா-வெல்டிங்” என்று அழைக்கின்றனர்.
இந்த ஜெல்லானது உலர்த்தப்பட்டு கப் தயாரிப்பதற்கு ஏற்ற வகையில் செய்யப்படுகிறது. இந்த செயல்முறை பாலிஸ்டிரீன் பிளாஸ்டிக்குகளை உற்பத்தி செய்வதை விட 97 சதவீதம் குறைவான கார்பன் உமிழ்வை உருவாக்குகிறது.
அதேவேளை தற்போது பயன்பாட்டில் உள்ள பிளாஸ்டிக்குகளை காட்டிலும் இவை சுற்றுசூழலுக்கு ஏற்றதாக உள்ளது என்று விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். பயோபிளாஸ்டிக்குகள் சோள மாவு, மரத்தூள் மற்றும் உணவுக் கழிவுகள் போன்ற கரிமப் பொருட்களிலிருந்து தயாரிக்கப்படுகிறது.
இவை பிளாஸ்டிக்குகளுக்கு மாற்றாக இருந்தாலும் இவை சுற்றுசூழலுக்கு தகுந்ததாக உள்ளதா? என்பது சந்தேகம் தான்.
ஆனால் இதுபோன்று உருவாக்கப்படும் கப்புகள் பாதிப்பை ஏற்படுத்தாது என தெரிவித்த ஆராய்ச்சியாளர்கள், இவற்றை விரைவில் சந்தைப்படுத்த உள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.