மெக்சிகோவில் சுட்டெரிக்கும் வெப்பம்; மக்கள் அவதி!
மெக்சிகோவில் இந்த மாத தொடக்கத்தில் இருந்து வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்தது.
இது படிப்படியாக உயர்ந்து 122 டிகிரி வெயில் கொளுத்தியது. இதன் காரணமாக கடந்த 3 வாரங்களாக உடலில் நெருப்பை அள்ளி போட்டது போல வெயில் வாட்டிவதைப்பதால் பொதுமக்கள் அவதிப்பட்டு வருகின்றனர்.
2 வாரங்களில் 100 பேர் பலி
பகல் நேரங்களில் வெப்ப அலை வீசி வருவதால் பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியே வரமுடியாமல் வீட்டுக்குள்ளேயே முடங்கி உள்ளனர். கொளுத்தும் வெயிலுக்கு வெப்பம் தாங்காமல் பலர் மயக்கம் போட்டு விழுந்தனர்.
வெப்ப அலையில் சிக்கி கடந்த 2 வாரங்களில் மெக்சிகோவில் 100 பேர் வரை இறந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். அதேவேளை மெக்சிகோவின் பல நகரங்களில் வெயில் காரணமாக பள்ளிகள் மூடப்பட்டு உள்ளது.
மேலும் மெக்சிகோவின் வடக்கு மாகாண பகுதிகள் தான் இந்த கடும் வெயிலுக்கு அதிகம் பாதிக்கப்பட்டு இருக்கிறது.