பிரித்தானியா இளவரசர் பிலிப் எழுதிய உயிலை 90 ஆண்டுகள் சீல் வைக்க உத்தரவு!
பிரித்தானியா இளவரசர் பிலிப் எழுதிய உயிலை 90 ஆண்டுகள் 'சீல்' வைத்து பாதுகாக்க வேண்டும் என லண்டன் ஐகோர்ட் உத்தரவிட்டு உள்ளது.
ஐரோப்பிய நாடான பிரித்தானியா ராணி இரண்டாம் எலிசபெத், 95. இவரது கணவர் இளவரசர் பிலிப், கடந்த ஏப்ரல் மாதம், 99 வயதில் மரணம் அடைந்தார்.
பிலிப்பிற்குரிய சொத்து மதிப்புகள் சுமார் 30 மில்லியன் பவுண்டுகள் என்று கணக்கிடப்பட்டிருக்கிறது. இதில் பெரும்பாலான சொத்துக்கள் அவரின் மனைவி மகாராணிக்கு தான் சொந்தமாம்.
இந்தநிலையில் இளவரசர் பிலிப் எழுதியுள்ள உயில் தொடர்பாக லண்டன் ஐகோர்ட் ஒரு உத்தரவை பிறப்பித்து உள்ளது. இதன்படி அவரது உயிலில் உள்ள விபரங்களை வெளிப்படுத்தாமல் இருக்க, அதை 90 ஆண்டுகள் 'சீல்' வைத்து பாதுகாக்க வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.
மறைந்த இளவரசர் பிலிப், அவரது மனைவி இரண்டாம் எலிசபெத்தின் கவுரவத்திற்காக தன் உயில் ரகசியம் பாதுகாக்கப்பட வேண்டும் என விருப்பம் தெரிவித்துள்ளார்.
இறையாண்மை மற்றும் அவரது குடும்பத்தினர் மற்றும் நெருங்கியவர்களின் கவுரவத்தை பாதுகாக்க, தனி நபர்களின் தனிப்பட்ட ரகசியங்களுக்கான பாதுகாப்பு அவசியமாக உள்ளது.
எனவே இளவரசர் பிலிப்பின் உயிலை 90 ஆண்டுகளுக்கு சீல் வைக்க உத்தரவிடப்படுகிறது. உயிலின் நகலை பதிவு செய்யவோ, கோர்ட்டில் தாக்கல் செய்யவோ கூடாது.
இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.