கனடாவின் பாஃன்ப் தேசிய பூங்கா ஏரியில் ஒருவர் நீரில் மூழ்கி உயிரிழப்பு
கனடாவின் அல்பெர்ட்டாவில் உள்ள புகழ்பெற்ற பாஃன்ப் தேசிய பூங்காவில் உள்ள பிரபல நீச்சல் பகுதியில் ஒருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் உறுதிப்படுத்தியுள்ளனர்.
பாஃன்ப் நகரில் இருந்து வடகிழக்கே சுமார் 11 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ள ஜான்சன் ஏரியிலிருந்து ஞாயிற்றுக்கிழமை மாலை 7 மணியளவில் ஒருவரது சடலம் மீட்கப்பட்டதாகக் காவல்துறையினர் தெரிவித்தனர்.
இந்த உயிரிழப்பில் எந்தவித சந்தேகமும் இல்லை என்று காவல்துறை செய்தித் தொடர்பாளர் கார்ப்பரல் ஜினா ஸ்லேனி தெரிவித்துள்ளார்.

இதனிடையே செவ்வாய்க்கிழமை காவல்துறை வெளியிட்ட புதிய தகவலின்படி, உயிரிழந்தவர் பாஃன்ப் பகுதியைச் சேர்ந்த 29 வயதுடைய நபர் என்பது தெரியவந்துள்ளது.
ராக்கி மலைத்தொடர் நீர்வழிப்பாதைகளில் வார இறுதியில் இடம்பெற்ற இரண்டாவது நீரில் மூழ்கிய சம்பவம் இதுவாகும். ஞாயிற்றுக்கிழமை காலையில் போ ஆற்றில் 52 வயதான கேன்மோர் பகுதியைச் சேர்ந்த ஒருவரது சடலம் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் தொடர்பாகவும் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கண்டெடுக்கப்பட்ட அந்த நபர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துவிட்டதாகக் கூறியுள்ள காவல்துறையினர், அவரது உயிரிழப்பிற்கான சூழல் குறித்துத் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.