தீ விபத்திலிருந்து தப்ப மாடியிலிருந்து குதித்த முதியவர் பரிதாப மரணம்
கனடாவின் எட்மண்டன் நகரில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் இருந்து தப்பிக்க முயன்ற 85 வயது முதியவர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
திங்கட்கிழமை இரவு 9.20 மணியளவில் 132 அவென்யூ மற்றும் 82 வீதி பகுதியில் அமைந்திருந்த மூன்று மாடி அடுக்குமாடி குடியிருப்பில் தீ மற்றும் வெடிப்பு ஏற்பட்டது.
பொலிஸாரின் தகவலின்படி, தீயில் சிக்கிய அந்த முதியவர் உயிர் தப்பும் முயற்சியில் தனது குடியிருப்பின் பால்கனியில் இருந்து கீழே குதித்துள்ளார்.

அவசர மருத்துவ சேவையினர் (EMS) அவருக்கு சிகிச்சை அளித்த போதிலும், ஏற்பட்ட காயங்களால் சம்பவ இடத்திலேயே அவர் உயிரிழந்தார். அதிகாரிகளின் ஆரம்ப விசாரணைகளின்படி, ஒரு வாகனம் கட்டுப்பாட்டை இழந்து வீதியை விட்டு விலகி, கட்டிடத்தின் பின்புறம் மற்றும் எரிவாயு குழாயில் மோதியுள்ளது.
இதனைத் தொடர்ந்து ஏற்பட்ட வெடிப்பால் தீ வேகமாக பரவியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
விபத்தை ஏற்படுத்தியதாகக் கூறப்படும் வாகனத்தை ஓட்டிய 62 வயதான ஆண் ஒருவர் உயிருக்கு ஆபத்தான காயங்களுடன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
விபத்திற்கான சரியான காரணம் குறித்து விசாரணைகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. தீ விபத்தில் சிக்கிய பல குடியிருப்பாளர்களை தீயணைப்பு வீரர்கள் மீட்டுள்ளனர்.
ஆரம்பத்தில் ஐந்து பேர் வைத்தியசாலைக்கு அனுப்பப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்திருந்த நிலையில், பின்னர் அந்த எண்ணிக்கை ஆறாக அதிகரிக்கப்பட்டது.
செவ்வாய்க்கிழமை பிற்பகல் 2.15 மணி நிலவரப்படி, அந்த கட்டிடத்தில் வசித்த இருவர் தொடர்பில் எந்த தகவலும் கிடைக்கவில்லை என பொலிஸார் தெரிவித்தனர்.
இந்த 16 குடியிருப்புகள் கொண்ட கட்டிடத்தில் சுமார் 35 பேர் வசித்து வந்ததாகவும், தரைத்தளத்தில் நான்கு வர்த்தக நிலையங்கள் இயங்கி வந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.