பரபரப்பை ஏற்படுத்திய ஹாரி - மேகன் பேட்டி ; பிரித்தானிய ராணி வெளியிட்ட அறிக்கை
எங்கள் மகன் கருப்பாக பிறந்து விடுவானோ என்று அரச குடும்பத்தினர் கவலைப்பட்டதாக ஹாரி- மேகன் தம்பதியினர் தொலைக்காட்சி நேரலையில் தெரிவித்திருந்தமை பரபரப்பினை ஏற்படுத்தி இருந்தது. இங்கிலாந்து இளவரசர் ஹாரியும், முன்னாள் அமெரிக்க நடிகையுமான மேகனும் காதலித்து, அரச குடும்பத்தின் ஒப்புதலோடு கடந்த 2018-ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டனர்.
எனினும் இங்கிலாந்து அரச குடும்பத்தின் அதிகாரம் மீது அதிக பற்றில்லாமல் இருந்து வந்த ஹாரி-மேகன் தம்பதி, அரச குடும்பத்தின் மூத்த உறுப்பினர்கள் என்ற பொறுப்பிலிருந்து விலகுவதாக கடந்த ஆண்டு அறிவித்தனர்.
இந்நிலையில் தற்போது அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் வசித்து வரும் இந்த தம்பதிக்கு ஏற்கனவே ஆர்ச்சி என்ற 2 வயது மகன் இருக்கும் நிலையில், மேகன் 2-வது முறையாக கர்ப்பமாகி இருக்கிறார். இதனிடையே ஹாரி-மேகன் தம்பதி அரச குடும்பத்திலிருந்து விலகியதற்கு இதுதான் காரணம் என இங்கிலாந்து பத்திரிகைகள் பல்வேறு கட்டுரைகளை வெளியிட்டு வந்தன.
எனினும் அவற்றுக்கு எந்தவித பதிலையும், விளக்கத்தையும் தெரிவிக்காமல் ஹாரியும் மேகனும் மவுனம் காத்து வந்தனர். இந்த நிலையில் அமெரிக்காவின் பிரபல தொலைக்காட்சியில் புகழ்பெற்ற நிகழ்ச்சி தொகுப்பாளர் ஓப்ரா வின்பிரே நடத்திய நேர்காணலில் ஹாரி, மேகன் ஆகிய இருவரும் அரச குடும்பத்தில் தாங்கள் எதிர்கொண்ட பிரச்சினைகள், தனிப்பட்ட வாழ்வில் சந்தித்த சவால்கள், தங்களுக்கு பிறக்கவிருக்கும் அடுத்த குழந்தையின் பாலினம் உள்ளிட்டவை குறித்து மனம் திறந்து பேசினர்.
குறிப்பாக மேகனுக்கு தற்கொலை செய்து கொள்ளும் எண்ணம் எல்லாம் வந்தது. அதுமட்டுமின்றி கலப்பின பெண்ணான தனக்கு பிறந்ததால், தங்கள் மகன் ஆர்ச்சிக்கு இளவரசர் பட்டம் மறுக்கப்பட்டது போன்ற பல குற்றச்சாட்டுகளை அவர் முன் வைத்தார். இந்த நிலையில், இங்கிலாந்து ராணி எலிசபெத் இந்தப்பேட்டி தொடர்பாக அறிக்கை ஒன்றை வெளியிட்டார். அதில், “அதில், கடந்த சில ஆண்டுகளாக ஹாரி மற்றும் மேகன் எவ்வளவு சவாலாக இருந்து வந்துள்ளனர் என்பதை முழு குடும்பமும் அறிந்து வருத்தப்படுகிறார்கள்.
எழுப்பப்பட்ட பிரச்சினைகள், குறிப்பாக இனம் தொடர்பானவை போன்றவை மிகவும் தீவிரமாக எடுத்துக் கொள்ளப்படும் என்றும், அவை அனைத்தும் குடும்பத்தினரால் தனிப்பட்ட முறையில் தீர்க்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.