டொரோண்டோ நகரில் தீவிர மழை எச்சரிக்கை
கனடா சுற்றுச்சூழல் துறை டொரோண்டோ நகரில் தீவிர மழை எச்சரிக்கையை வெளியிட்டுள்ளது.
அதன்படி இன்று மாலை வரை நகரின் சில பகுதிகளில் அதிகபட்சமாக 60 மில்லிமீட்டர் மழை பெய்யக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. இன்று முற்பகலில் மட்டுமே சுமார் 35 மில்லிமீட்டர் மழை பதிவாகியுள்ளது.
மேலும், டான் வேலி பார்க்வேக்கு கிழக்கில் உள்ள பகுதிகளில் கூடுதல் 20 மில்லிமீட்டர் மழை இன்னும் பெய்யும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மாலை நேரத்தில் மழை குறைந்து வரும் என்று எதிர்வு கூறப்பட்டுள்ளது.
அதிக மழை காரணமாக சாலைப் பகுதிகளில் தண்ணீர் தேங்கி நிற்கும் நிலை மற்றும் விரைவான வெள்ளம் ஏற்பட வாய்ப்பு உள்ளது என அறிவிக்கப்பட்டுள்ளது.
சிறிய ஆறுகள், சுனைகள் மற்றும் தாழ்வான இடங்களில் உள்ள குடியிருப்புகள் வெள்ள அபாயத்தில் உள்ளன. அதேவேளை நதிகள் மற்றும் வாய்க்கால்கள் அருகே நிலச்சரிவுகளும் ஏற்படலாம் என்றும் எதிர்வுகூறப்பட்டுள்ளது.