மரணப்படுக்கையில் தந்தை... கனேடியருக்கு வெளிநாட்டில் அனுமதி மறுப்பு
மரணப்படுக்கையில் இருக்கும் தந்தையை காண அவுஸ்திரேலியாவில் குடியிருக்கும் கனேடியருக்கு கொரோனா கட்டுப்பாடுகளால் அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.
கொரோனா கட்டுப்பாடுகள் அமுலில் இருப்பதால் அவுஸ்திரேலிய குடிமக்களும் நிரந்தர வதிவிட உரிமம் பெற்றவர்களும் உரிய அனுமதி இல்லாமல் அவுஸ்திரேலியாவை விட்டு வெளியேற முடியாத சூழல் உள்ளது.
இந்த நிலையில் அவுஸ்திரேலியாவில் குடியிருக்கும் பிரிட்டிஷ் கொலம்பிய பெண்மணி ஒருவர், மரணப்படுக்கையில் இருக்கும் தங்தையை காண முயன்று வருகிறார்.
ஆனால் இதுவரை அவுஸ்திரேலிய நிர்வாகம் அவருக்கு அனுமதி அளிக்கவில்லை என்றே தெர்ரிய வந்துள்ளது. பிரிட்டிஷ் கொலம்பியாவை சேர்ந்த Cheryl Joy என்பவர் தமது குடும்பத்துடன் அவுஸ்திரேலியாவின் பெர்தில் வசித்து வருகிறார்.
அவுஸ்திரேலியாவில் கடுமையான எல்லைக் கட்டுப்பாடுகள் அமுலில் இருப்பதால் Cheryl Joy போன்ற ஆயிரக்கணக்கானவர்கள் தங்கள் நாடுகளுக்கு செல்ல முடியாமல் தத்தளித்து வருகின்றனர்.
கனேடியரான தம்மால் இதுபோன்ற சூழலில் வசிக்க முடியாது என குறிப்பிட்டுள்ள Cheryl Joy, கூடிய விரைவில் கனடா திரும்பவே முயன்று வருவதாக தெரிவித்துள்ளார்.
தங்களின் விருப்பத்திற்கு மாறாக கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளதாகவும் Cheryl Joy கொந்தளித்துள்ளார். ஆனால், கடுமையான கட்டுப்பாடுகள், துரிதமான நடவடிக்கைகளால் கொரோனா பரவலை கட்டுக்குள் கொண்டு வந்துள்ளது அவுஸ்திரேலியா.
இருப்பினும் அவுஸ்திரேலியா நிர்வாகத்தின் கடும்போக்கு நடவடிக்கைகள் உரிமைகளை பறிப்பதாக உள்ளது எனவும் சிலர் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளனர்.
புற்றுநோயால் அவதிப்பட்டுவரும் தமது தந்தையை, அவரின் மரணத்திற்கு முன்பு ஒருமுறை சந்திக்க முடியுமா என்பது சந்தேகமே என்கிறார் Cheryl Joy.
அவுஸ்திரேலிய குடிமக்கள் மற்றும் நிரந்தர வதிவிட உரிமம் பெற்றவர்கள் 2020 மார்ச் 25 முதல் நாட்டை விட்டு வெளியேற விலக்கு கோரி 363,000 க்கும் மேற்பட்ட விண்ணப்பங்களை சமர்ப்பித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.