அச்சத்தை ஏற்படுத்தும் ட்ரம்ப் எச்சரிக்கை ; ஹோர்முஸ் நீரிணையில் காத்திருக்கும் சிக்கல்
ஹோர்முஸ் நீரிணை வழியாக நுழைய முயலும் அல்லது வெளியேற முயலும் அனைத்து கப்பல்களையும் அமெரிக்கா முற்றுகையிட போவதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் எச்சரித்துள்ளார்
தான் பயன்படுத்தும் Truth Social சமூக வலைத்தளத்தில் வெளியிட்ட பதிவில், சமீபத்திய பேச்சுவார்த்தைகள் சாதகமாக நடந்தாலும் முக்கியமான அணுசக்தி தொடர்பான விடயத்தில் உடன்பாடு எட்டப்படவில்லை என்று அவர் குறிப்பிட்டார்

பாதுகாப்பு சிக்கல்கள்
மேலும், கடல் போக்குவரத்து சுதந்திரம் குறித்து எதிர்காலத்தில் ஒப்பந்தம் ஏற்படலாம் எனத் தெரிவித்த அவர், ஹோர்முஸ் பகுதியில் பாதுகாப்பு சிக்கல்கள் இருப்பதாகவும், குறிப்பாக கண்ணிவெடிகள் இருப்பதற்கான அபாயத்தை மறுக்க முடியாது என்றும் கூறினார்.
இதற்காக ஈரான் மீது அவர் மறைமுகமாக குற்றச்சாட்டு முன்வைத்துள்ளார். அதே நேரத்தில், சர்வதேச கடற்பரப்பில் இயங்கும் சில கப்பல்கள் ஈரானுக்கு கட்டணம் செலுத்துகின்றன என்ற தகவல்களைத் தொடர்ந்து, அவற்றைத் தேடி தடுத்து நிறுத்த அமெரிக்க கடற்படைக்கு உத்தரவிட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
மேலும், ஹோர்முஸ் நீரிணையில் பதிக்கப்பட்டிருக்கக்கூடிய கண்ணிவெடிகளை அகற்றும் நடவடிக்கைகளும் ஆரம்பிக்கப்படவுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
சட்டவிரோத கட்டண முறைகள் மூலம் பயணம் மேற்கொள்ளும் கப்பல்களுக்கு பாதுகாப்பு உறுதி செய்யப்படமாட்டாது என்றும், அமெரிக்கா அல்லது அமைதியான கப்பல்களுக்கு எதிராக ஏதேனும் தாக்குதல் நடத்தப்பட்டால் கடுமையான பதிலடி வழங்கப்படும் என்றும் அவர் எச்சரித்தார்.
இந்த பாதுகாப்பு நடவடிக்கைகள் விரைவில் அமலுக்கு வரும் எனவும் அவர் தனது பதிவில் தெரிவித்துள்ளார்.