அமெரிக்காவில் இடம்பெற்ற விருந்து நிகழ்ச்சி விழா ஒன்றில் துப்பாக்கி சூடு! இருவருக்கு நேர்ந்த பரிதாபம்
அமெரிக்காவின் இல்லினாய்ஸ் மாகாணம் சிகாகோ நகரில் அண்மை காலமாக துப்பாக்கிச் சூடு சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. கடந்த ஒரு ஆண்டில் மட்டும் சிகாகோ நகரில் நடைபெற்ற துப்பாக்கிச் சூடு சம்பவங்களில் 760 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.
இந்தநிலையில் சிகாகோ நகரில் உள்ள ஒரு தனியார் தொழிற்சாலைக்கு வெளியே நேற்றுமுன்தினம் இரவு விருந்து நிகழ்ச்சி நடந்தது. ஏராளமான இளைஞர்கள் மது ஆடல் பாடல் என மகிழ்ச்சியில் திளைத்தனர்.
அப்போது அங்கு வந்த 2 நபர்கள் கூட்டத்தினரை நோக்கி துப்பாக்கியால் சுடத் தொடங்கினர். இதனால் அங்கு பெரும் பதற்றமும் பீதியும் உருவானது. உயிரைக் காப்பாற்றிக் கொள்வதற்காக அனைவரும் நாலாபுறமும் சிதறி ஓடினர்.
ஆனாலும் அந்த மர்ம நபர்கள் சற்றும் ஈவு இறக்கமின்றி கண்ணில் பட்டவர்களையெல்லாம் குருவியை சுடுவதுபோல் சுட்டுத் தள்ளினர். இதில் 15 பேரின் உடல்களில் துப்பாக்கிக் குண்டுகள் துளைத்த ரத்த வெள்ளத்தில் சரிந்தனர்.
அவர்களில் ஒரு பெண் உள்பட 2 பேர் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து இறந்தனர்.
இதற்கிடையில் துப்பாக்கிச்சூடு குறித்த தகவல் கிடைத்ததும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். ஆனால் அதற்குள் தாக்குதல் நடத்திய மர்ம நபர்கள் அங்கிருந்து தப்பி ஓடி விட்டனர்.
அதனைத் தொடர்ந்து துப்பாக்கிச் சூட்டில் படுகாயமடைந்த அனைவரையும் மீட்டு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.
துப்பாக்கிச்சூடு நடத்திய நபர்கள் யார்? தாக்குதலின் பின்னணி என்ன? என்பது குறித்து போலீசார் தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.