பொதுமக்கள் மீது துப்பாக்கி சூடு... காயங்களுடன் தப்பிய பலர்: அதிகரிக்கும் பலி எண்ணிக்கை
அமெரிக்காவின் சேக்ரமென்டோ நகரில் காரில் வந்த நபர், கூட்டத்தின் மீது துப்பாக்கிச் சூடு நடத்திய சம்பவத்தில் இதுவரை 6 பேர் பலியாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
கலிபோர்னியா மாநிலத்தின் சேக்ரமென்டோ நகரில் உள்ளூர் நேரப்படி அதிகாலையில் பொதுமக்கள் மீது மர்ம நபர் திடீரென துப்பாக்கி சூடு நடத்தியுள்ளார்.
காரில் வந்த அந்த நபர் கிட்டத்தட்ட 50 ரவுண்டுகள் சுட்டதாக கூறப்படுகிறது. இந்த தாக்குதலில் இதுவரை 6 பேர் பலியாகியுள்ளதாகவும் 9 பேர் காயங்களுடன் தப்பியுள்ளதாகவும் காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்துள்ள பொலிசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். தாக்குதல் நடத்திய நபரின் நிலை என்ன என்ற தகவல் வெளியாகவில்லை.
துப்பாக்கிச் சூட்டிற்கான சூழ்நிலை மற்றும் நோக்கம் குறித்த விவரங்கள் உடனடியாகத் தெரியவில்லை. ஆனால் சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் சிலர் இதுபற்றி அதிர்ச்சியுடன் கூறி உள்ளனர்.
எல் சாண்டோ உணவகத்திற்கு அருகே காரில் வந்த ஒரு நபர், கூட்டத்தின் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியதாக கூறி உள்ளனர்.
சம்பவ இடத்தில் பதற்றம் நிலவுவதால், பொதுமக்கள் யாரும் அந்த பகுதிக்கு வர வேண்டாம் என காவல் துறை கேட்டுக்கொண்டுள்ளது.