அமெரிக்காவில் விளையாட்டு வீரர்களுடன் தரையில் வீழ்ந்து சிதறிய சிறியரக விமானம் ; 5 பேரும் பலி
அமெரிக்காவின் டெக்சாஸ் மாநிலத்தில் சிறிய ரக விமானம் ஒன்று விபத்துக்குள்ளானதில் அதில் பயணித்த 5 பேரும் உயிரிழந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
அமரிலோ (Amarillo) நகரிலிருந்து நியூ பிரான்ஃபெல்ஸ் (New Braunfels) நகரை நோக்கி நேற்று இரவு குறித்த விமானம் புறப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். குறித்த விமானத்தில் மொத்தம் 5 பேர் பயணித்திருந்தனர்.

விமானம் டெக்சாஸ் மாநிலத்தின் விம்பர்லி (Wimberley) பகுதியில் வானில் பறந்து கொண்டிருந்தபோது திடீரென கட்டுப்பாட்டை இழந்து தரையில் விழுந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
வனப்பகுதியில் விழுந்த விமானம் பின்னர் தீப்பற்றி எரிந்ததாகவும், இதனால் பெரும் சேதம் ஏற்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது. இந்த கோர விபத்தில் விமானத்தில் பயணித்த 5 பேரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர்.
மேலும், விபத்துக்குள்ளான விமானத்தில் பிக்கில்போல் (Pickleball) விளையாட்டு வீரர்கள் பயணித்திருந்ததாக ஆரம்ப தகவல்கள் தெரிவிக்கின்றன.வி
விபத்து குறித்து தகவல் அறிந்த மீட்புக் குழுவினர் உடனடியாக சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று மீட்புப் பணிகளில் ஈடுபட்டனர்.
உயிரிழந்தவர்களின் சடலங்கள் மீட்கப்பட்டு, மேலதிக விசாரணைகளுக்காக பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.
இந்த விபத்திற்கான சரியான காரணம் இதுவரை உறுதிப்படுத்தப்படாத நிலையில், சம்பவம் தொடர்பில் அமெரிக்க பொலிஸார் மற்றும் தொடர்புடைய அதிகாரிகள் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.