உயிரிழந்த தாயின் ஓய்வூதியத்தை பெற மகன் செய்த பித்தலாட்டம் அம்பலம்
இத்தாலியின் போர்கோ விர்ஜிலியோ நகரை சேர்ந்த 56 வயதான நபர், இறந்த தனது தாய் போல் வேடமிட்டு அவரது ஓய்வூதிய தொகையை பெற்று மோசடி செய்து வந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
அந்த நபரின் தாய் கிராசியெல்லா டால்ஓக்லியோ கடந்த 2022-ம் ஆண்டு தனது 82-வது வயதில் மரணம் அடைந்தார்.

பெண் வேடமிட்டு மோசடி
ஆனால் அவரது ஓய்வூதிய தொகையை தொடர்ந்து பெற எண்ணிய மகன் தனது தாயின் மரணத்தை அரசுக்கு தெரிவிக்காமல் உடலை பதப்படுத்தி வீட்டில் மறைத்து வைத்து உள்ளார்.
அதன்பின் தனது தாயை போல் பெண் வேடமிட்டு ஓய்வூதியத்தை பெற்று வந்துள்ளார். இதற்கிடையே அரசு அலுவலகத்தில் கிராசியெல்லாவின் அடையாள அட்டையை புதுப்பிக்க அந்த நபர் பெண் வேடத்தில் சென்றார்.
அப்போது அவர் மீது ஒரு ஊழியருக்கு சந்தேகம் ஏற்பட்டது. அந்த நபரின் கைகளில் உள்ள தோல் 85 வயது முதியவரின் தோற்றத்தைப் போல் இல்லை என்பதையும் சுருக்கங்கள் விசித்திரமாக இருந்ததையும் ஊழியர் கவனித்தார்.
உடனே பொலிஸாருக்கு தகவல் தெரிவித்தார். பொலிஸார் அங்கு வந்து விசாரித்தபோது தாயை போல் வேடமிட்டு ரூ.80 லட்சம் ஓய்வூதியத்தை பெற்று மோசடி செய்தது தெரியவந்தது.
இதையடுத்து அந்த நபரை கைது செய்தனர். மேலும் வீட்டில் பதப்படுத்தி வைக்கப்பட்டிருந்த கிராசியெல்லா உடலையும் மீட்டனர்.