தெற்காசிய நாட்டவர் மாலைதீவுக்கு சுற்றுலா செல்ல அனுமதி
தெற்காசிய நாட்டவர் மாலைதீவுக்கு சுற்றுலா செல்ல அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இந்நிலையில் தெற்காசியர்கள் மாலைதீவை அடைந்தவுடன் சுற்றுலா விசாவை பெற்றுக்கொள்ளலாம் எனவும் பிசிஆர் பரிசோதனையில் நெகட்டிவ் பெறுபேறு பெற்றவர்கள் மாத்திரமே மாலைதீவுக்குள் அனுமதிக்கப்படுவர் எனவும் மாலைதீவு சுற்றுலாத்துறை அமைச்சு அறிவித்துள்ளது.
அண்மைக் காலமாக பொலிவூட், கோலிவூட் என சினிமா பிரபலங்களும், விளையாட்டுப் பிரபலங்களும் குடும்பத்தோடு மாலைதீவுக்கு படையெடுத்து, அங்கிருந்து தான் புகைப்படங்களை எடுத்து தள்ளினார்கள். இந்த நிலையில், கொரோனா 2ஆம் அலை பரவல் காரணமாக மே மாதம் 13 ஆம் திகதி தெற்காசிய நாட்டவருக்கு மாலைதீவு அரசு பயணத் தடை விதித்தது.
கொரோனாவால் வீட்டைவிட்டு வெளியே போகமுடியாமல் முடங்கிக் கிடந்த பிரபலங்களின் சுற்றுலா மனநிலையை மீண்டும் தூண்டும் விதமாக தற்போது எதிர்வரும் 15 ஆம் திகதி முதல் இந்தியா உள்ளிட்ட தெற்காசிய நாடுகளை சேர்ந்தவர்கள் மாலைதீவுகளுக்கு செல்வதற்கு அனுமதி வழங்கப்படும் என மாலைதீவு ஜனாதிபதி இப்ராகிம் முகம்மத் சோலிஹ் அறிவித்துள்ளார். அத்துடன் கொரோனோ சோதனையில் நெகடிவ் சான்றிதழ் மட்டும் இதற்கு போதுமானது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
2021 ஆம் ஆண்டில் மட்டும் இந்தியாவில் இருந்து ஒரு லட்சம் பயணிகளுக்கு மேல் மாலத்தீவு சென்று உள்ளனர். இதெவேளை முழுக்க முழுக்க சுற்றுலாவையே நம்பி இருக்கும் ஒரு அதிசய நாடுதான் மாலைதீவு. மிகவும் குட்டி நாடு ஆகும் . கிட்டத்தட்ட 80 சதவீதத்திற்கும் மேல் நீரால் சூழப்பட்ட மாலைதீவு பார்ப்பதற்கு மிக ரம்யமான தோற்றத்தை கொடுக்கும்.
அழகழகான கடற்கரைகள், நெஞ்சம் கொள்ளை கொள்ளும் இயற்கை காட்சிகள் என சுற்றுலாப் பயணிகளை கவரும் பல விஷயங்கள் மாலைதீவில் உள்ளன.
இதேவேளை கடந்த 2009ஆம் ஆண்டு இந்த நாட்டின் அமைச்சரவைக் கூட்டம் கடலுக்கு அடியில் நடத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது,