தென்கொரியாவில் செய்தி நிறுவனங்கள்,சேனல்களுக்கு கடும் தண்டனை
தென்கொரியாவில் பொய் தகவல்களைப் பரப்பும் செய்தி நிறுவனங்கள் மற்றும் இணைய ஊடகங்களுக்கு கடுமையான தண்டனைகள் விதிக்கும் சட்டமூலம் நேற்று, அந்நாட்டு நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது.
செய்தி நிறுவனங்களும், பெரிய யூடியூப் சேனல்களும், சட்டவிரோதமான, பொய்யான தகவல்களைத் தீங்கு விளைவிக்கும் அல்லது இலாப நோக்கத்துடன் பரப்பினால், நீதிமன்றங்கள் ஐந்து மடங்குவரை அபராதம் விதிக்கலாம் என்ற சட்டமூலமே நேற்று நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது.

முதல்முறையாகக் குற்றம் நிரூபிக்கப்பட்டால் 30 இலட்சம் (இந்திய மதிப்பில்) ரூபாய் வரையிலும், இரண்டு முறைக்கு மேல் அதே குற்றத்தைச் செய்தால், 6 கோடி ரூபாய் வரையிலும் அபராதம் விதிக்க அந்த சட்டம் வழிவகுக்கிறது.
அத்துடன் கடுமையான சிறைத் தண்டனை உள்ளிட்டவைகளும் அந்த சட்டத்தில் இடம்பெற்றுள்ளன.
தென்கொரியாவில் அதிகரித்து வரும் போலிச் செய்திகள் மற்றும் தவறான தகவல்கள், சமூக பிளவுகளை ஏற்படுத்துவதாகக் கூறி ஜனநாயகக் கட்சியைச் சேர்ந்த லீ ஜே மியுங் தலைமையிலான அரசாங்கம் நிறைவேற்றியுள்ளது.
இந்நிலையில் எதிர்க்கட்சியினரும், பத்திரிகையாளர் அமைப்புகளும் இது கருத்துச் சுதந்திரத்தை நசுக்கும் செயல் என கண்டனம் வெளியிட்டுள்ளன.