இருளில் மூழ்கிய ஸ்பெயின், பிரான்ஸ்; சைபர் தாக்குதலா?
ஐரோப்பிய நாடுகளான பிரான்ஸ் மற்றும் ஸ்பெயினில் நேற்று (28) திடீரென மொத்தமாக மின்வெட்டு ஏற்பட்டுள்ளது. பாரிஸ், மாட்ரிட் என பல நகரங்களில் ஏற்பட்ட இந்த மின்வெட்டால் தானியங்கி சிக்னல்கள் முழுவதும் செயல்படாமல் நின்று போனதால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
சுரங்க ரயில் பாதைகளில் மின்சாரம் நின்று போனதால் ரயிலில் சென்ற பயணிகள் பாதி வழியில் சிக்கிக் கொண்டனர். அத்துடன், ரயில் நிலையத்தில் இருந்த பயணிகளும் சுரங்க பாதையில் இருந்து வெளியே வர முடியாமல் தவித்தனர்.
சைபர் தாக்குதலா?
முக்கிய நகரங்களில் மெட்ரோ சேவைகள் முழுவதும் மூடப்பட்டதால் பல மணி நேர போராட்டத்திற்கு பிறகே பயணிகளை மீட்க முடிந்தது. பள்ளிகள், மருத்துவமனைகள் என அனைத்தும் இருளில் மூழ்கியது மட்டுமல்லாமல் ஸ்பெயின் பாராளுமன்றமும் இருளில் மூழ்கியது.
எனினும் சில மணி நேர போராட்டங்களுக்கு பிறகு மீண்டும் மின் இணைப்பு கிடைத்து நிலைமை சீரானது. ஆனால் மின்வெட்டு ஏற்பட்டதற்கான காரணம் குறித்து இதுவரை தெரியவில்லை.
ஸ்பெயின், பிரான்ஸ் நாடுகளில் மின்பகிர்மானம் தானியங்கி முறையில் நடைபெறுவதாக கூறப்படும் நிலையில் இது சைபர் தாக்குதலாக இருக்குமா என்ற கேள்வியும் எழுந்துள்ளது.