டேபிள் மலையில் தீப்பரவல்! உலகின் வரலாற்றுச் சிறப்பு மிக்க கட்டிடங்களிற்கு பெரும் ஆபத்து
தென்னாப்பிரிக்காவின் கேப்டவுனிலுள்ள டேபிள் மலை தேசிய பூங்காவில் தீப்பரவல் ஏற்பட்டுள்ளது. குறித்த காட்டுத்தீ கேப் டவுன் பல்கலைக்கழக வளாகத்தில் பரவியுள்ளது. இதனால் நூற்றுக்கணக்கான மாணவர்கள் அங்கிருந்து வெளியேற்றப்பட்டுள்ளார்கள்.
அரசியல்வாதியான சிசில் ரோட்ஸ் நினைவுச்சின்னம் அருகே நேற்று ஞாயிற்றுக்கிழமை காலை ஏற்பட்ட வெடிப்பின் காரணமாக தீ விரைவாக பரவியயுள்ளது.
இதனால் அங்கிருந்த உணவகமொன்று தீயில் எரிந்து நாசமாகியுள்ளது. பல்கலைக்கழகத்தின் வரலாற்று சிறப்புமிக்க நூலகம், மோஸ்டெர்ட்ஸ் காற்றாலை மற்றும் பிற கட்டிடங்களும் தீயினால் சேதமடைந்துள்ளன. அப்பகுதியில் வசிப்பவர்களுக்கு காற்றில் கரும்புகை மற்றும் தூசுத்துகள்கள் வருவதாக எச்சரிக்கப்பட்டுள்ளது.
மேலும் ஜன்னல்கள் மற்றும் கதவுகளை மூடி வைக்குமாறு கூறப்பட்டுள்ளது. தீயை அணைக்கும் பணியில் நான்கு ஹெலிகொப்டர்கள் ஈடுபட்டுள்ளதோடு, 200 தீயணைப்பு வீரர்கள் ஈடுபட்டுள்ளார்கள்.
இந்நிலையில், இரண்டு தீயணைப்பு வீரர்கள் காயமடைந்து, வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்கள்.
வரட்சி மற்றும் காய்ந்த புதர்கள் காரணமாக காட்டுத்தீ வேமாக பரவி வருகிறது.
தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர மூன்று நாட்கள் தேவைப்படும் என தீயணைப்பு வீரர்கள் தெரிவித்துள்ளார்கள்.



