இலங்கை போராட்டம்: காவல்துறையின் மனுவை நிராகரித்த நீதிமன்றம்
இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியால் நிலைமை நாளுக்கு நாள் மோசமாகி வருகிறது.
கடந்த சில மாதங்களாக எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக மக்களின் அன்றாட வாழ்க்கையே கேள்விக்குறியாகி உள்ளது.
பொருளாதார நெருக்கடியை தவறாக கையாண்டதாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ (Gotabaya Rajapaska) மீது பொதுமக்கள் குற்றம்சாட்டியதுடன், அவர் பதவி விலக வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடத்தி வருகின்றனர்.
இந்த நிலையில் கொழும்புவில் உள்ள ஜனாதிபதி வீட்டின் அருகே நாளை மற்றும் நாளை மறுதினம் போராட்டம் நடத்த திட்டமிட்டுள்ளனர்.
ஒரே சமயத்தில் பல்லாயிரக்கணக்கானோர் திரண்டால் சட்டம் ஒழுங்கு பாதிக்கப்படும் அபாயம் உள்ளது.
இந்த நிலையில், கொழும்பு துறைமுகம் காவல்துறை சார்பில் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
அதில், ஜனாதிபதி வீடு உள்ள பகுதியில் ஆர்ப்பாட்டக்காரர்கள் நுழைவதை தடுக்க உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என கேட்கப்பட்டிருந்தது.
இந்த மனு மீது விசாரணை நடத்திய நீதிமன்றம், ஆர்ப்பாட்டக்காரர்களை தடுக்க எந்த உத்தரவும் பிறப்பிக்க முடியாது என கூறிவிட்டது.
அத்துடன், ஆர்ப்பாட்டக்காரர்களை அமைதியான முறையில் போராட்டம் நடத்த அனுமதி அளித்தது.
தற்போது நிலவும் பொருளாதார நெருக்கடி மற்றும் பொதுமக்களுக்கு ஏற்பட்டுள்ள சிரமங்களை கையாள்வதில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, பிரதமர் ரணில் விக்கிரமசிங்கே இருவருமே திறமையாக செயல்படாததால் இருவரும் பதவி விலக வேண்டும் என்று போராட்ட ஒருங்கிணைப்பாளர்கள் வலியுறுத்தி உள்ளனர்.