நோர்வேயில் தடம் பதித்த இலங்கைத் தமிழ்ப் பெண்!
நோர்வேயில் இடம்பெற்ற நாடாளுமன்ற தேர்தலில், இலங்கை தமிழரான ஹம்ஸி குணரட்ணம் பாராளுமன்றத்துக்கு தெரிவு செய்யப்பட்டுள்ளமை புலம்பெயர் தமிழர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
உள்நாட்டுப்போர் காரணமாக இலங்கையில் இருந்து மூன்று வயதில் தனது பெற்றோருடன் நோர்வேக்கு அகதியாக சென்ற ஹம்ஸி (ஹம்சாயினி), தமிழ் இளையோர் அமைப்பில் இணைந்து அரசியலுக்குள் நுழைந்தார்.
இதன்போது தொழிற்கட்சியின் ஒஸ்லோ இளைஞரணியில் இணைந்த அவர் அதன் தலைவியாகவும் பதவி வகித்தவர். 19 வயதில் (2007) ஒஸ்லோ மாநகரசபையின் பிரதிநிதியாகப் பெரும் ஆதரவுடன் தெரிவான அவர், 2015முதல் ஒஸ்லோ மாநகரசபையின் துணை முதல்வராகப் பதவி வகிக்கிறார்.
அத்துடன் நோர்வேயின் மிகப்பெரிய கட்சியான தொழிற்கட்சி, தலைநகர் ஒஸ்லோவில் நிறுத்திய வேட்பாளர்களில், பிரதமர் பதவிக்கான வேட்பாளர் யூனாஸ் கார் ஸ்டூரவுக்கு அடுத்த இடத்தில் ஹம்சியை நிறுத்தியதன் மூலம் அவரது நாடாளுமன்றப் பதவியை உறுதி செய்திருந்தது.
இந்நிலையில் அவருக்கு பலரும் பாராட்டுக்களையும் வாழ்த்துக்களையும் கூறிவருகின்றனர். இதேவேளை முழுநேர அரசியல்வாதியாக நோர்வே தமிழர்கள் மத்தியில் இருந்து ஹம்ஸி மாத்திரமே உருவாகியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.