அவுஸ்திரேலியாவில் இலங்கையரின் விபரீத முடிவு; பரிதாபமாக உயிரிழந்த குழந்தைகள்
அவுஸ்திரேலியாவின் பேர்த் நகரில் இலங்கையர் ஒருவர் தனது இரண்டு பிள்ளைகளை கொன்றுவிட்டு தானும் தற்கொலை செய்து கொண்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
சம்பவத்தில் படுகொலை செய்யப்பட்ட சிறுவனுக்கு 6 வயதும் சிறுமிக்கு 4 வயதும் என அவுஸ்திரேலிய பொலிஸார் தெரிவித்துள்ளதாக கூறப்படுகின்றது. 40 வயதான இந்திக குணதிலக என்ற இலங்கையர் தனது மகளையும் மகனையும் கொலை செய்துவிட்டு தானும் தற்கொலை செய்துகொண்டுள்ளார்.
வெள்ளிக்கிழமை மாலை 6.30 மணியளவில் பிள்ளைகள் தங்கள் தாயுடனான சந்திப்பிற்கு வராததால், தாயாரால் பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து அங்கு அதிகாரிகள் வீட்டிற்கு சென்றபோதே குறித்த சம்பவம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.
இந்நிலையில் சம்பவம் குறித்து அந்நாட்டு பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
மேலும் இந்த சம்பவம் இடம்பெறுவதற்கு இரண்டு நாட்களுக்கு முன்பு, அவர்கள் அனைவரும் ஒரு கடற்கரையில் சூரிய அஸ்தமனத்தின் போது கைகளைப் பிடித்துக் கொண்டு, இருப்பது போன்ற புகைப்படத்தை முகநூலில் குணதிலக பகிர்ந்துள்ளார் .
அதேவேளை கிறிஸ்மஸுக்கு முன், குணதிலக தனது சுயவிபரத்தை பேஸ்புக்கில் 18 நிமிட வீடியோவாக வெளியிட்டார். அதில் அவர் மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், மருந்துகள் பரிந்துரைக்கப்பட்டதாகவும், உளவியல் நிபுணரைப் பார்த்து வருவதாகவும் கூறியுள்ளார்.


