கனடாவில் பட்டப்பகலில் இந்திய வம்சாவளி இளைஞருக்கு ஏற்பட்ட துயரம்
பிரிட்டிஷ் கொலம்பியாவில் பாடசாலை வாகன நிறுத்தும் இடத்தில் கத்தியால் தாக்கி இந்திய வம்சாவளியைச் சேர்ந்த 18 வயது இளைஞர் கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பிரிட்டிஷ் கொலம்பியா மாகாணத்தின் சர்ரே நகரத்தில் செவ்வாயன்று இந்த சம்பவம் நடந்துள்ளது. 17 வயது சிறுவனுடன் ஏற்பட்ட வாக்குவாதத்தின் போது கத்தியால் தாக்கப்பட்டதாக விசாரணையில் தெரியவந்துள்ளது.
இதில், மெஹக்ப்ரீத் சேத்தி (Mehakpreet Sethi) என்ற இளைஞர் படுகாயத்துடன் மீட்கப்பட்டு, மருத்துவமனையில் சேர்ப்பிக்கப்பட்ட நிலையில், சிகிச்சை பலனின்றி மரணமடைந்துள்ளார்.
தொடர்புடைய சம்பவம் குறித்து தகவல் கிடைத்ததும் பொலிஸார் சம்பவப்பகுதிக்கு விரைந்து உயிர் காக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். பின்னர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் இளைஞர் சிகிச்சை பலனின்றி மரணமடைந்துள்ளதாக பொலிஸ் தரப்பு தெரிவித்துள்ளது.
இதனிடையே, சந்தேக நபர் சாட்சிகளால் அடையாளம் காணப்பட்டு கைது செய்யப்பட்டுள்ளார். அவரும் இந்திய வம்சாவளியை சேர்ந்தவரா என்பது குறித்த தகவல் வெளியாகவில்லை.