கனடா பள்ளி ஒன்றில் பரபரப்பு சம்பவம்: வெளிவரும் அதிர்ச்சி தகவல்
ரொறன்ரோவில் North York பகுதியில் அமைந்துள்ள பள்ளி வளாகத்தில் நடந்த கத்திக்குத்து சம்பவத்தில் ஒருவர் சிகிச்சை பலனின்றி மரணமடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
பொலிசார் வெளியிட்ட தகவலில், செவ்வாய்க்கிழமை மதியம் 3 மணியளவில், ரொறன்ரோ பள்ளி ஒன்றில் கத்திக்குத்து சம்பவம் தொடர்பில் தங்களுக்கு தகவல் கிடைத்துள்ளதாக தெரிவித்துள்ளனர்.
தகவலையடுத்து சம்பவப்பகுதிக்கு விரைந்த பொலிசார், இருவரை ரத்த காயங்களுடன் மீட்டுள்ளனர். மூன்றாவது நபரை சம்பவம் நடந்த ஒரு மணி நேரத்திற்கு பின்னர் மீட்டுள்ளனர்.
இதில் ஒருவர் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சேர்ப்பிக்கப்பட்டுள்ளதாகவும், எஞ்சிய இருவரும் ஆபத்தான நிலையிலேயே உள்ளனர் என பொலிஸ் தரப்பு தெரிவித்திருந்தது.
இந்த நிலையில், காயம் காரணமாக ஒருவர் மருத்துவமனையிலேயே மரணமடைந்ததாக செவ்வாய்க்கிழமை பொலிசார் உறுதி செய்துள்ளனர். தற்போது இந்த வழக்கை படுகொலை என கருதி விசாரணை முன்னெடுக்கப்படும் என பொலிஸ் தரப்பு தெரிவித்துள்ளது.
மட்டுமின்றி, இந்த கத்திக்குத்து சம்பவம் தொடர்பில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் பொலிசார் தெரிவித்துள்ளனர். குறித்த தாக்குதல் சம்பவமானது, பள்ளிக்கு வெளியே வளாகத்தில் நடந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இருப்பினும் மாணவர்கள் யாரேனும் கத்தியால் குத்தியதில் ஈடுபட்டார்களா என்பது தெளிவாகத் தெரியவில்லை என பொலிஸ் தரப்பு சுட்டிக்காட்டியுள்ளது.
கத்திக்குத்து சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் அதே பள்ளியை சேர்ந்தவர்களா அல்லது தாக்குதலுக்காக திட்டமிட்டு பள்ளி வளாகத்தில் வந்தவர்களா என்பது தொடர்பில் விசாரிக்கப்பட்டு வருவதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.
இந்த விவகாரம் தொடர்பில் தகவல் தெரியவரும் பொதுமக்கள் விசாரணை அதிகாரிகளுக்கு உதவ முன்வர வேண்டும் என பொலிஸ் தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
நடந்த கத்திக்குத்து சம்பவத்தை பல எண்ணிக்கையிலான மாணவர்கள் நேரில் பார்த்ததாக பள்ளி நிர்வாகம் தெரிவித்துள்ளது.
இதனால் பல மாணவர்கள் மனதளிவில் பாதிக்கப்பட்டிருக்கலாம் எனவும், அவர்களுக்கு உரிய ஆலோசனைகள் வழங்கப்படும் என பள்ளி நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.