போரை விரைவாக நிறுத்துங்கள்; பெற்றோரை இழந்த 6 வயது குழந்தையின் உருக்கமான கோரிக்கை
போரை விரைவாக நிறுத்துங்கள் என தாய் தந்தைகளை இழந்த உக்ரைனின் 6 வயது சிறுவன் இல்லியா கோஸ்டுஷேவிச் பிரித்தானிய பிரதமர் போரிஸ் ஜான்சனுக்கு கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார்.
உக்ரைன் மீது ரஷ்யா தொடுத்துள்ள போர் முடிவுக்கு வராது மூன்று மாதங்களை கடந்துள்ள நிலையில், உக்ரைனிய நகரங்கள் சிதைக்கப்பட்டு அடிப்படை வசதிகள் கூட கிடைக்காத நிலைக்கு தள்ளப்பட்டுவிட்டது.
உக்ரைனின் முக்கிய துறைமுக நகரான மரியுபோலையும் ரஷ்ய படையினரின் தங்களது பலவார முற்றுகைக்கு பிறகு முற்றிலுமாக சிதைத்ததுடன் கட்டுப்பாட்டிற்குள்ளும் கொண்டுவந்துள்ளனர்.
இதில் நூற்றுக்கணக்கான உக்ரைனிய பொதுமக்கள் கொல்லப்பட்டதோடு, ஆயிரக்கணக்கான பெண்கள், குழந்தைகள் முதியவர்கள் என பலர் தங்களது சொந்த இருப்பிடத்தை விட்டு வெளியேறியுள்ளனர்.
இந்தநிலையில் மரியுபோலில் தாக்குதலில் தாய் தந்தைகளை இழந்த இல்லியா கோஸ்டுஷேவிச், போரை உடனடியாக நிறுத்துங்கள் என உக்ரைனிய தேசிய கொடி வரையப்பட்ட கடிதத்தை பிரித்தானிய பிரதமர் போரிஸ் ஜான்சனுக்கு அனுப்பியுள்ளார்.
அந்த கடிதத்தில் அன்புள்ள போரிஸ் ஜான்சன் அவர்களுக்கு, இந்த போர் விரைவாக முடிவடைய வேண்டும், அப்போது தான் மக்கள் உயிரிழக்க மாட்டார்கள், நான் எனது சொந்த ஊரான மரியுபோலில் கால்பந்து விளையாட வேண்டும், மேலும் உலகத்தில் உள்ள அனைத்து குழந்தைகளும் போர் குறித்த அனுபவங்களை பெறக்கூடாது என நான் விரும்புகிறேன் என எழுதியுள்ளார்.
அத்துடன் எனது சார்பில் பிரித்தானியாவில் உள்ள அனைத்து குழந்தைகளுக்கும் ஹாய் ஒன்றை சொல்லுங்கள், எங்களுக்கு உதவியதற்கு நன்றி, இந்த போரில் நிச்சியாமாக வெற்றி பெறுவோம் எனவும் இல்லியா கோஸ்டுஷேவிச் எழுதியுள்ளார்.
அந்த கடிதத்தை இல்லியா கோஸ்டுஷேவிச்(6) FC ஷக்தரின் என்ற கால்பந்து பயிற்சி அணியின் நிர்வாகிகள் Darijo Srna-விடம் கொடுத்து, பிரித்தானிய பிரதமரிடம் கொண்டு சேர்க்கும்படியும் வேண்டிக் கொண்டுள்ளார்.