10 வயது மாணவனை கொன்று செல்பி எடுத்த 15 வயது மாணவன்; அச்சத்தில் உறைந்த ஆசிரியர்கள்
ரஷ்யாவில் 15 வயதான மாணவன் தாக்கியதில் 10 வயது மாணவன் பலியான நிலையில், அதனை சந்தேக நபரான மாணவன் செல்பி எடுத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இது குறித்த வீடியோவும் சமூக வலைத்தளங்களில் வைரலானது. ரஷியாவின் மாஸ்கோ நகரில் ஒடின்ட்சோவோ மாவட்டத்தில் கோர்கி-2 என்ற கிராமத்தில் படித்து வரும் மாணவன் திமோதி (வயது 15). சரியாக படிக்கவில்லை என்பதற்காக ஆசிரியர் சிறுவனை கண்டித்துள்ளார். இதனால் மாணவன் ஆத்திரத்தில் இருந்துள்ளான்.

ஆசிரியர்கள் வகுப்பறைகளுக்குள் தஞ்சம்
இந்நிலையில், திமோதி நேற்று பள்ளிக்கு வந்தபோது பையில் கத்தியை மறைத்து எடுத்து சென்றுள்ளான். ஆசிரியை ஒருவரிடம் எந்த நாட்டை சேர்ந்தவர் நீங்கள்? என கேட்டிருக்கிறான். அப்போது, டிமிட்ரி பாவ்லவ் (வயது 32) என்ற பள்ளி பாதுகாவலர் சம்பவ பகுதிக்கு வந்துள்ளார்.
அவரை பார்த்ததும், பையில் இருந்த மிளகு ஸ்பிரேவை எடுத்து திடீரென டிமிட்ரியின் முகத்தில் அடித்துள்ளார். இதனால், அதிர்ச்சியடைந்து சரிந்து கீழே விழுந்த அவரை கத்தியால் தாக்கியதில் அவருக்கு பலத்த காயம் ஏற்பட்டது.
இதுதவிர, அந்த கட்டிடத்தில் இருந்த வேறு சில மாணவர்களையும் கத்தியால் குத்தியுள்ளான். இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த மற்ற மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் வகுப்பறைகளுக்குள் சென்று தஞ்சமடைந்தனர்.
திமோதி அணிந்திருந்த டி-சர்ட்டில் உயிர்கள் முக்கியம் இல்லை என எழுதப்பட்டு இருந்தது. முக கவசம் மற்றும் ஹெல்மெட் அணிந்து பள்ளிக்கு சென்றுள்ளான்.
ரஷியாவில் பள்ளிகளில் இதுபோன்ற சம்பவங்கள் நடப்பது அரிது. எனினும், சமீப ஆண்டுகளாக பள்ளியில் தாக்குதல் நடத்துவது அதிகரித்து உள்ளதாக கூறப்படுகின்றது.