தீடிரென தீப்பிடித்து எரிந்த படகு: 40 பயணிகளுக்கு நேர்ந்த சோகம்!
வங்காளதேசத்தில் ஆற்றில் சென்ற படக்கில் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கிய சுமார் 150 பேர் காயங்களுடன் மீட்கப்பட்டு வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதேவேளை 40 பேர் உயிரிழந்திருப்பதாக தெரியவந்துள்ளது.
இச்சம்பவம், இன்று அதிகாலை (24-12-2021) வங்காளதேசத்தின் தெற்கு பகுதியில் உள்ள சுகந்தா ஆற்றில் சென்றுகொண்டிருந்த போது இடம்பெற்றுள்ளது.
மேலும் இச்சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது, சுகந்தா ஆற்றில் சென்றுகொண்டிருந்த மிகப்பெரிய பயணிகள் படகு இன்று அதிகாலையில் திடீரென தீப்பற்றி எரிந்தது. டாக்காவில் இருந்து பார்குணா நோக்கி சென்ற அந்த படகின், என்ஜின் பகுதியில் முதலில் தீப்பற்றியதாக தெரிகிறது.
இதனையடுத்து, படகின் மற்ற பகுதிகளுக்கும் தீ பரவியது. இதனால் தூங்கிக்கொண்டிருந்த பயணிகள் தீயில் சிக்கிக்கொண்டனர். பலர் உயிர்பிழைப்பதற்காக ஆற்றில் குதித்து நீந்தி கரையேறி உள்ளனர்.
மேலும் இவ்விபத்து குறித்து தகவலறிந்த மீட்புக்குழுவினர் விரைந்து சென்று தீயை அணைத்து மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். இதுவரை 40 பேர் உயிரிழந்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த 40 பேரில் பெரும்பாலானோர் தீயில் சிக்கி இறந்துள்ளனர். சிலர் ஆற்றில் குதித்ததால் நீரில் மூழ்கி இறந்துள்ளனர்.
சுமார் 150 பேர் காயங்களுடன் மீட்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மேலும் பலரைக் காணவில்லை. அவர்களை தேடும் பணி தொடர்ந்து நடைபெறுகிறது. படகில் மொத்தம் 800 பேர் பயணம் செய்ததாக கூறப்படுகிறது.