பயணப்பை ஒன்றிற்குள் மனித உடல்! அவுஸ்திரேலியாவில் கொலை வழக்கில் குழப்பம்
அவுஸ்திரேலியாவில் கைவிடப்பட்ட பயணப்பை ஒன்றிற்குள் மனித உடல் இருப்பதாகக் கருதி ஆரம்பிக்கப்பட்ட கொலை வழக்கு விசாரணை, அது மனித உருவத்தை ஒத்த பொம்மை (Lifelike sex doll) என்ற உண்மை கண்டறியப்பட்ட பின்னர், முடிவுக்கு கொண்டு வரப்பட்டுள்ளதாக அவுஸ்திரேலியா ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
நியூ சவுத் வேல்ஸ் மாநிலத்தில் உள்ள 'ஓலன்' (Oallen) கிராமப் பகுதியில் சிற்றுந்தில் பயணித்துக்கொண்டிருந்த இருவர், சாலையோரத்தில் வீசப்பட்டிருந்த பயணப்பையைக் கண்டு காவல் துறைக்குத் தகவல் தெரிவித்தனர்.

தடயவியல் பரிசோதனையில், அது மனித உடல் அல்ல
ஆரம்பத்தில் இதனை ஒரு கொலைச் சம்பவமாகக் கருதிய காவல்துறை, உடனடியாக சிறப்புப் புலனாய்வுத் துப்பறியும் நிபுணர்கள் மற்றும் தடயவியல் குழுவை சம்பவ இடத்துக்கு அனுப்பி விசாரணையை துரிதப்படுத்தியது.
எனினும் தடயவியல் பரிசோதனையில், அது மனித உடல் அல்ல என்பதும், ஆடைகள், முடி, மூக்குத்தி அணிவிக்கப்பட்ட மனித உருவத்தை ஒத்த தத்ரூபமான பொம்மை என்பது தெரியவந்தது.
பொம்மையில் காயங்கள் மற்றும் உராய்வுகள் போன்ற அடையாளங்கள் இருந்ததால், அது மனித உடல் என்ற சந்தேகம் மேலும் வலுப்பெற்றதாகக் காவல்துறை தெரிவித்தது.
இது குறித்துக் கருத்து தெரிவித்த நியூ சவுத் வேல்ஸ் காவல்துறை கண்காணிப்பாளர் லிண்டா பிராட்பரி, "ஆரம்பத்தில் அது மனித உடல் என்றே தவறாகப் புரிந்துகொள்ளப்பட்டது என்று குறிப்பிட்டார். மனித எச்சங்களைப் போலவே மிகவும் தத்ரூபமாக இருந்தபோதிலும், விஞ்ஞான பரிசோதனைகள் மூலம் அது பொம்மை என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது என்று அவர் தெரிவித்தார்.
சரியான நடைமுறைகளைப் பின்பற்றி விசாரணை நடத்தப்பட்டதால் இதில் எந்த வருத்தமும் இல்லை எனக் குறிப்பிட்ட காவல்துறை, இந்த விசித்திரச் சம்பவத்தின் விசாரணையை அதிகாரப்பூர்வமாக நிறைவுசெய்துள்ளதாக தெரிவித்துள்ளது.