ரொறன்ரோவில் கொடூர கொலை வழக்கில் முக்கிய குற்றவாளி கைது
கடந்த மாதம் Etobicoke-ல் நடந்த கொலைச் சம்பவம் தொடர்பாக தேடப்படும் சந்தேக நபரை ரொறன்ரோ பொலிசார் கைது செய்துள்ளனர்.
ஜான் கார்லேண்ட் பவுல்வர்ட் மற்றும் மார்ட்டின் க்ரோவ் சாலையில் செப்டம்பர் 29ம் திகதி குறித்த கொடூர சம்பவம் அரங்கேறியுள்ளது. தகவலையடுத்து சம்பவப்பகுதிக்கு விரைந்த பொலிசார், 26 வயதான Khalid Jama என்பவரை உயிருக்கு ஆபத்தான நிலையில் மீட்டு மருத்துவமனையில் சேர்ப்பித்துள்ளனர்.
ஆனால், காயங்கள் காரணமாக குறித்த இளைஞர் சிகிச்சை பலனின்றி மருத்துவமனையிலேயே மரணமடைந்துள்ளார். இந்த நிலையில், புதன்கிழமை ரொறன்ரோ பொலிசார் வெளியிட்ட தகவலில்,
குறித்த கொலை வழக்கில் தொடர்புடைய 26 வயது Salah Abukar என்பவரை கைது செய்துள்ளதாகவும், அவர் தற்போது பொலிஸ் காவலில் இருப்பதாகவும், அவர் மீது முதல் நிலை கொலை வழக்கு பதியப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.
இதனால், இந்த வழக்கு நீதிமன்றத்தில் நிரூபிக்கப்பட்டால், Salah Abukar என்பவருக்கு 25 ஆண்டுகள் பிணையில் வெளிவர முடியாதபடி ஆயுள் தண்டனை விதிக்கப்படும் என்றே தெரிய வந்துள்ளது.
இந்த வழக்கு தொடர்பில் தகவல் தெரியவரும் பொதுமக்கள் பொலிசாரை நாட கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.