கர்ப்பிணியையும் காதலரையும் சுட்ட கனேடிய அழகி நாடு கடத்தல்
கர்ப்பிணியையும் காதலரையும் சுட்டுவிட்டு தலைமறைவான கனேடிய அழகி ஒருவர் ஹங்கேரி பொலிசாரிடம் சிக்கிய நிலையில் அவர் கனடாவுக்கு நாடுகடத்தப்பட்டுள்ளார்.
2020ஆம் ஆண்டு பிப்ரவரி 28 அன்று மாலை, கனடாவின் ஹாமில்டன் நகரில் ஒரு துப்பாக்கிச்சூடு சம்பவத்தில் Tyler Pratt (39) என்பவர் கொல்லப்பட்டார்.
கர்ப்பிணியான அவரது காதலியின் வயிற்றில் குண்டு பாய்ந்ததில், அவரது வயிற்றிலிருந்த குழந்தை இறந்துபோனது. துப்பாக்கிச்சூட்டை நிகழ்த்தியவர்கள் Oliver Karafa (28), மற்றும் அவரது காதலியான Yun 'Lucy' Lu Li (25) என்னும் சமூக ஊடக பிரபலமும், கனேடிய செல்வந்தரான ஒருவரின் மகளும் என பொலிசாருக்கு தெரியவந்தது.
ஆனால், பொலிசார் வருவதற்குள் தப்பிய Karafaவும் அவரது காதலியான Lu Liயும் கனடாவிலிருந்து வெளியேறியிருந்தார்கள். 24 மணி நேரத்துக்குள் பல நாடுகளைக் கடந்து ஹங்கேரி தலைநகரான புதாபெஸ்டை அடைந்திருந்தார்கள் அவர்கள். சமீபத்தில் அவர்கள் இருவரும் ஹங்கேரி பொலிசாரிடம் சிக்கினார்கள்.
அவர்கள் மீது கொலை மற்றும் கொலை முயற்சிக் குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. அவர்கள் இருவரையும் பொலிசார் கனடாவுக்கு நாடு கடத்த திட்டமிட்ட நிலையில், அதற்கு ஒப்புக்கொண்ட Lu Li நேற்று கனடா கொண்டுவரப்பட்டார்.
ஆனால், அவரது காதலரான Karafa தன்னை நாடு கடத்த தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வழக்கு தொடர்ந்து வருவதால், Tyler கொலை வழக்கு மேலும் தாமதமாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.