தீக்கிரையாக்கப்பட்ட இன்னொரு கத்தோலிக்க தேவாலயம்: நீடிக்கும் மர்மம்
ஆல்பர்ட்டாவின் Morinville பகுதியில் கத்தோலிக்க தேவாலயம் ஒன்று தீக்கிரையாக்கப்பட்ட சம்பவம் மீண்டும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பிரிட்டிஷ் கொலம்பியாவில் சமீபத்தில் 4 தேவாலயங்கள் தீக்கிரையாக்கப்பட்ட நிலையில், தற்போது அல்பர்ட்டாவில் பிரபலமான கத்தோலிக்க தேவாலயம் ஒன்று மர்ம நபர்களால் தீக்கிரையாக்கப்பட்டுள்ளது.
Morinville பகுதியில் அமைந்துள்ள புனித ஜீன் பாப்டிஸ்ட் பாரிஷ் தேவாலயமே புதன்கிழமை மர்ம நபர்களால் தீக்கிரையாக்கப்பட்டுள்ளது.
தகவல் அறிந்து தீயணைப்பு மற்றும் மீட்பு குழுவினர் சம்பவ பகுதிக்கு வந்து சேரும் முன்னரே, தேவாலயத்தின் மொத்த பகுதியிலும் தீ படர்ந்துள்ளது. சுமார் 50 தீயணைப்பு வீரர்கள் ஒன்றிணைந்து போராடி, தீயை கட்டுக்குள் கொண்டு வந்துள்ளனர்.
ஆனால் தேவாலயம் மொத்தமாக சேதமடைந்துள்ளது. 130 ஆண்டுகள் பழமையான இந்த தேவாலயம் அப்பகுதியின் கலாச்சார சின்னமாக விளங்கியுள்ளது.
தற்போது மொத்தமாக தீக்கிரையான சம்பவம் அப்பகுதி மக்களை கண்டிப்பாக பாதிக்கும் என்றே நம்பப்படுகிறது. புனித ஜீன் பாப்டிஸ்ட் தேவலயம் தீக்கிரையான சம்பவத்தில், பொலிசார் விசாரணை முன்னெடுத்துள்ளனர்.
முன்னர், பிரிட்டிஷ் கொலம்பியாவில் 4 கத்தோலிக்க தேவாலயங்கள் தீக்கிரையாக்கப்பட்ட நிலையில், பயன்பாட்டில் இல்லாத ஒரு தேவாலயமும் தாக்குதலுக்கு இலக்கானது.
இந்த நிலையில் தற்போது ஆல்பர்ட்டாவில் 3 தேவாலயங்கள் தீக்கிரையாக்கப்பட்டுள்ளது. காம்லூப்ஸ் பகுதியில் 215 பூர்வக்குடி மாணவர்களின் கல்லறை ஒன்று கண்டெடுக்கப்பட்ட ஒரு மாதத்திற்கு பிறகு, கத்தோலிக்க தேவாலயங்கள் மீது தாக்குதல் முன்னெடுக்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.