ரஷியா படைகளை திணறவைக்க உக்ரைன் மக்களின் போர் யுக்தி
உக்ரைனில் பெண்கள் உள்பட பொதுமக்கள் பல போர் யுக்திகளை கற்று ரஷிய படைகளை எதிர்கொள்ள தயாராகி வருகின்றனர்.
உக்ரைன் மீது ரஷியா தொடர்ந்து 5வது நாளாக தாக்குதலை நடத்தி வருகிறது. உக்ரைனின் 2வது பெரிய நகரமான கார்கீவில் ரஷியா-உக்ரைன் படைகள் இடையே கடுமையான மோதல் நடைபெற்று வருகிறது. இரு தரப்பிற்கும் இடையே நடந்து வரும் மோதலில் 4,300 ரஷிய வீரர்கள் உயிரிழந்துள்ளனர் என உக்ரைன் அரசு நேற்று தெரிவித்திருந்தது.
ரஷியா மற்றும் உக்ரைன் போர் தொடர்ந்து வரும் நிலையில், அதனை எதிர்கொள்ள உக்ரைன் நாட்டு பொதுமக்களும் தங்களை தயார்படுத்தி வருகின்றனர். ஜனநாயகத்திற்கான மிக பெரிய விலையை உக்ரைன் கொடுக்கும்.
நாங்கள் அனைவரும் உயிர்பிழைக்க சாத்தியமில்லை. நாங்கள் போரிட விரும்பவில்லை. ஆனால், எதிரிகளை எங்களது நிலத்தில் இருந்து விரட்டியடித்து, எங்களை தனியாக சுதந்திரமுடன் இருக்க செய்வதற்கான பணிகளை நாங்கள் செய்ய வேண்டும் என அவர்கள் கூறி வருகின்றனர்.
இதற்காக பல போர் யுக்திகளை அவர்கள் கையாளுகின்றனர். இதுபற்றி உக்ரைனின் சோர்த்கிவ் நகர மேயரான ஷ்மத்கோ கூறும்போது, போரை முன்னிட்டு ரஷிய படைகளை திணற செய்வதற்காக, சாலை வழிகாட்டி பலகைகள் நீக்கப்பட்டு உள்ளன.
தெரு விளக்குகள் அணைக்கப்பட்டு உள்ளன. முக்கிய நுழைவு பகுதிகளில் சோதனை சாவடிகள் அமைக்கப்பட்டு உள்ளன. இதற்காக மணல் மூட்டைகள், டயர்கள் ஆகியவற்றை கொண்டு தடுப்புகள் அமைக்கப்பட்டு வருகின்றன.
இதற்காக ஒரே நாளில் உள்ளூர்வாசிகள் 80 பேர் ஒன்றாக சேர்ந்து அதனை கட்டி எழுப்பி உள்ளனர். இந்த சாலை வழியே பீரங்கிகள் வருவது அறியப்பட்டால், அதுபற்றி அந்த பகுதியில் இருக்கும் மற்றவர்களுக்கு தெரிவிக்கப்படும்.
பின்பு சோதனை சாவடியில் இருப்பவர்கள் வேறு இடங்களுக்கு செல்வதுடன், ஒரே குண்டுவெடிப்பில் சோதனை சாவடி தகர்க்கப்படும். எதிரிகள் அனைவரும் கொல்லப்படுவார்கள் என கூறியுள்ளார்.
இந்நிலையில் கையெறி குண்டுகளை அல்லது துப்பாக்கியால் சுடுவது பற்றி பொதுமக்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. ரஷிய பீரங்கிகள் குண்டு வீசினால் அதனை ராணுவம் மற்றும் குடிமக்கள் பிரிவு எதிர்கொள்வதற்கான உயர்மட்ட திட்டமும் வகுக்கப்பட்டு உள்ளது.
பெண்களும், காலியான காக்டெயில் பாட்டில்களை கொண்டு பெட்ரோல் எறிகுண்டுகளை தயாரிக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். போர் திட்டங்கள் வகுக்கப்பட்டு ராணுவ பிரிவுகளில் நூற்றுக்கணக்கானோர் சேர்க்கப்பட்டு வருகின்றனர் என கூறியுள்ளார்.
இதுபோன்ற பல போர் யுக்திகளை கையாண்டு ரஷிய படைகளை எதிர்கொள்ளும் முயற்சியில் ராணுவத்துடன் சேர்ந்து பொதுமக்களும் ஈடுபட்டு வருகின்றனர்.

