ஆப்கானில் இந்திய தூதரகங்களை சூறையாடிய தலிபான்கள்!
ஆப்கானிஸ்தானில் அராஜகத்தை தொடங்கி உள்ள தாலிபான்கள் ஒவ்வொரு வீடு, வீடாக சென்று சோதனை நடத்தி வருகின்றனர். 2 நகரங்களில் இந்திய தூதரகங்களில் நுழைந்து சூறையாடிய தலிபான் தீவிரவாதிகள் அங்கிருந்த முக்கிய ஆவணங்கள், கார்களை எடுத்துச் சென்றுள்ளனர்.
ஆப்கானிஸ்தானில் ஆட்சியை பிடித்துள்ள தாலிபான் தீவிரவாதிகள், இம்முறை பல்வேறு வாக்குறுதி அளித்துள்ளனர். பெண்களை மரியாதையாக நடத்துவோம், பத்திரிகை சுதந்திரம் காப்போம், உலக நாடுகளுடன் இணக்கமாக இருப்போம் என பேட்டி அளித்தனர்.
ஆனால் ஆரம்பத்திலேயே இந்த வாக்குறுதிகளை காற்றில் பறக்கவிட்டு, மீண்டும் தங்கள் அராஜக கொடுமைகளை அரங்கேற்றி வருகின்றனர். அமெரிக்கா மற்றும் நேட்டோ படைகளுடன் தொடர்பில் இருந்தவர்களை வீடுவீடாகத் தேடிச் செல்கின்றனர் தாலிபான்கள். அவர்களுடன் அவர்களின் குடும்பத்தாரையும் குறிவைக்கின்றனர். பெண் பத்திரிகையாளர்களுக்கு தடை விதித்துள்ளனர்.
ஜெர்மனி பத்திரிகையாளர் ஒருவரை தேடி வரும் தலிபான்கள் அவரது உறவினர் ஒருவரை நடுரோட்டில் வைத்து கொலை செய்துள்ளனர். இந்த சம்பவங்களால் ஆப்கன் மக்கள் பீதி அடைந்துள்ளனர். இதுமட்டுமின்றி, இந்திய தூதரகங்களையும் தாலிபான்கள் சூறையாடி உள்ளனர்.
ஆப்கானிஸ்தானில் தலைநகர் காபூல், கந்தகார், ஹிரத், மஜார் இ ஷரிப் ஆகிய 4 நகரங்களில் இந்திய தூதரங்கள் உள்ளன. இந்தியர்களை மீட்கும் பணிக்காக காபூல் தூதரகம் மட்டும் மூடப்படவில்லை. மற்ற 3 தூதரகங்கள் மூடப்பட்டு அனைத்து அதிகாரிகளும், ஊழியர்களும் இந்தியா அழைத்து வரப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், பூட்டப்பட்டுள்ள கந்தகார், ஹிரத் நகர தூதரகங்களில் தலிபான் தீவிரவாதிகள் நுழைந்து சூறையாடியிருப்பதாக இந்திய அரசு தரப்பு தகவல்கள் தெரிவிக்கின்றன. அங்கு அலமாரிகளை துழாவிய தீவிரவாதிகள் முக்கிய ஆவணங்களை கைப்பற்றி உள்ளனர். அதோடு தூதரகத்தில் நிறுத்தப்பட்டிருந்த கார் உள்ளிட்ட வாகனங்களையும் அவர்கள் எடுத்துச் சென்றுள்ளனர்.
ஏற்கனவே இந்திய தூதரக2ங்களில் இருந்து அதிகாரிகள், ஊழியர்கள் வெளியேறுவதை தாலிபான்கள் விரும்பவில்லை. அவர்களுக்கு எந்த பாதுகாப்பு அச்சுறுத்தலும் இருக்காது என கத்தார் அமைப்பு மூலமாக இந்திய அரசிடம் வலியுறுத்தி இருந்தனர். அதையும் மீறி அவர்கள் அனைவரும் இந்தியா அழைத்து வரப்பட்டனர். இது தாலிபான்களை ஆத்திரமூட்டி இருப்பதாகவும் கூறப்படுகிறது.