தலீபான் பயங்கரவாதிகள் சரமாரி துப்பாக்கிச் சூடு: 11 பொலிஸ் அதிகாரிகள் சுட்டுகொலை!
ஆப்கானிஸ்தானில் 20 ஆண்டுகளாக நீடிக்கும் உள்நாட்டு போரை முடிவுக்கு கொண்டு வருவது தொடர்பாக தலீபான் பயங்கரவாத அமைப்புக்கும் அந்த நாட்டு அரசுக்கும் இடையே நடந்த அமைதி பேச்சுவார்த்தையில் எந்தவித முன்னேற்றமும் ஏற்படவில்லை.
இதனால் தலீபான் பயங்கரவாதிகள் அரசுக்கு எதிரான தாக்குதல்களை தீவிரப்படுத்தி வருகின்றனர். போலீசார் மற்றும் ராணுவ வீரர்களை குறிவைத்து தொடர்ந்து பயங்கரவாத தாக்குதல்களை அரங்கேற்றி வருகின்றனர்.
இந்தநிலையில் ஆப்கானிஸ்தானின் கிழக்கு பகுதியில் கஜினி மாகாணத்தின் குவாஜா ஒமரி மாவட்டத்தில் உள்ள 3 போலீஸ் சோதனைச்சாவடிகள் மீது தலீபான் பயங்கரவாதிகள் அடுத்தடுத்து தாக்குதல் நடத்தினர்.
இதில் போலீஸ் அதிகாரிகள் 6 பேர் சம்பவ இடத்திலேயே பலியாகினர். மேலும் பலர் படுகாயமடைந்தனர்.அதேசமயம் போலீசாரின் பதில் தாக்குதலில் பயங்கரவாதிகள் 4 பேர் கொல்லப்பட்டனர்.
இதனிடையே மற்றொரு கிழக்கு மாகாணமான லோகாரின் தலைநகர் பொல் இ ஆலம் நகரில் உள்ள ஒரு போலீஸ் சோதனை சாவடியை தலீபான் பயங்கரவாதிகள் சுற்றி வளைத்து சரமாரி துப்பாக்கிச் சூடு நடத்தினர். இதில் போலீஸ் அதிகாரிகள் 5 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.