மகளிர் நல அமைச்சைக் கலைத்து வேறு பெயர் மாற்றிய தலிபான்கள்!
ஆப்கானில் மகளிர் நல அமைச்சைக் கலைத்த தலிபான்கள், அதற்கு பெயர் மாற்றியுள்ளார்கள். ஆப்கானிஸ்தானில் ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்றிய தலிபான்கள் 33 பேர் கொண்ட புதிய அரசாங்கத்தை அமைத்துள்ளனர்.
இதில் ஒரு பெண் கூட இடம்பெறவில்லை. தலிபான்கள் ஆட்சியைப் பிடித்ததால் ஆப்கானிஸ் தானில் பெண்களின் உரிமை கேள்விக்குறியாகி உள்ளதாக பல்வேறு நாடுகள் கருத்து தெரிவித்து வருகின்றன.
ஏற்கனவே ஆட்சியில் தலிபான்கள் இருந்தபோது பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்திருந்ததுடன் பெண்கள் வேலைக்குச் செல்வதை தடை செய்திருந்தனர். எனினும் தற்போது அதுபோன்று கட்டுப்பாடுகள் விதிக்கப்படாது என்று தலிபான்கள் தெரிவித்திருந்த நிலையில், பெண்கள் மீதான பல்வேறு கட்டுப்பாடுகளைக் கொண்டு வந்துள்ளனர்.
ஆப்கானிஸ்தானின் பெண்கள் விவகார அமைச்சரவை அலுவலகத்தில் பெண் ஊழியர்கள் வரக்கூடாது என்று திருப்பி அனுப்பி விட்டதுடன், இதே போல பல இடங்களில் வேலைக்குச் செல்லும் பெண்களை திருப்பி அனுப்பி வருகிறார்கள்.
இந்த நிலையில் ஆப்கானிஸ்தானில் மகளிர் நல அமைச்சை தலிபான்கள் கலைத்து அந்த அமைச்சுக்கு பிரார்த்தனை, வழிகாட்டுதல், நல்லொழுக்கத்தை மேம்படுத்துதல் அமைச்சு என்று பெயரை மாற்றி உள்ளனர்.
இந்த அமைச்சு ஏற்கனவே 1996 முதல் 2001 வரை தலிபான்கள் ஆட்சியில் இருந்தபோது செயற்பாட்டில் இருந்தது.
இந்த அமைச்சின் ஊடாக பெண்கள் கண்காணிக்கப்பட்டு உறவினர்களுடன் செல்லாமல் தனியாகச் செல்லும் பெண்களுக்கு தண்டனை கொடுத்து வந்தார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.