இலங்கை கோயிலில் தமிழ் செப்பேடு - யாழ். பல்கலை பேராசிரியர் கண்டுபிடிப்பு
இலங்கையின் வடமத்திய மாகாணத்தையும், கிழக்கு மாகாணத்தையும் இணைக்கும் பகுதியில் அமைந்துள்ள பாரம்பரிய தமிழ் பிரதேசமொன்றுக்கான சான்றுகளை யாழ்ப்பாணம் பல்கலைக்கழக வரலாற்றுத்துறை தலைவர் பேராசிரியர் ப.புஸ்பரட்ணம் கண்டுபிடித்துள்ளார்.
பொலநறுவை - மட்டக்களப்பு பிரதான வீதியுடன் இணைந்திருக்கும் மன்னம்பிட்டிப் பிரதேசம் ,வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த ஓர் இடமாகும்.
வரலாற்றுத் தொடக்க காலத்தில் இருந்து கிழக்கிலங்கைக்கு உட்பட்டிருந்த இந்த பாரம்பரிய பிரதேசமானது, ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் இருந்து நிர்வாக வசதிக்காக பொலநறுவை மாவட்டத்துடன் இணைந்து செயற்பட்டுள்ளது.
இந்த பிரதேச எல்லைக்குள் முக்துக்கல், சமணன்பிட்டி, தம்பன்கடவை, கருப்பளை கண்டக்காடு, சொரிவில், திரிகோணமடு, கல்லூர், பிள்ளையாரடி ஆகிய பழம்பெரும் தமிழ்க் கிராமங்கள் காணப்படுகின்றன.
மக்கள் வாழாத இந்த கிராமங்கள் சிலவற்றின் ஒதுக்குப்புறங்களில் கைவிடப்பட்ட வயல் நிலங்கள், காடுகள், சிறு மலைகள், ஆதிகால மக்கள் வாழ்ந்த கற்குகைள் என்பன காணப்படுகின்றன.
இந்த ஆதாரங்கள் இக்கிராமங்களுக்கு தொன்மையான தொடர்ச்சியான வரலாற்று மரபு இருப்பதை உறுதி செய்வதாக உள்ளன. இந்த உண்மையை இக்கிரமங்களில் ஆங்காங்கே காணப்படுகின்ற இந்து, பௌத்த ஆலயங்கள், ஆலய எச்சங்கள் மேலும் உறுதி செய்கின்றன.
அவ்வாறான வரலாற்றுப் பழைமைவாய்ந்த ஆலயங்களில் ஒன்றே தற்காலத்திலும் வழிபாட்டிலிருந்து வரும் தம்பன்கடுவையில் உள்ள சித்திரவேலாயுதர் கோயிலாகும்.
வரலாற்றுக் கதைகளில் இருந்து...
இந்த ஆலயம் தோன்றிய காலத்தை துல்லியமாகக் கணிக்கக் கூடிய நம்பகரமான ஆதாரங்கள் இதுவரை கிடைக்கவில்லை. ஆயினும் இந்த பிரதேச மக்களிடையே நிலவிவரும் வாய்மொழி வரலாற்றுக் கதைகளின் மூலம், இந்த ஆலயம், முன்பொரு காலத்தில் ஆகம மரபு சாராத கிராமிய ஆலயமாக இருந்துள்ளதாக தெரிய வருகிறது.
வேல் சின்னத்தை கொண்டிருந்த இந்த ஆலயம், காலப்போக்கில் ஆகம மரபில் கற்கள் கொண்டு கட்டப்பட்ட ஆலயமாக வளர்ந்துள்ளதை உறுதிப்படுத்த முடிவதாக பேராசிரியர் ப.புஸ்பரட்ணம் கூறுகிறார்.
மன்னம்பிட்டி பிரதேசத்தில் காணப்படும் தொல்லியல், வரலாற்றுச் சின்னங்களை தேடிக் கண்டறிந்து அவற்றைப் பதிவு செய்து வரும் இப்பிரதேசத்திற்குரிய வரலாற்று ஆர்வலர் நகுலேஸ்வரன் பிரவின் என்பவர், இவ்வாலயத்தில் காணப்படும் செப்பு பட்டயத்தின் புகைப்படப் பிரதியொன்றை ஊடகவியலாளரும், அரசியல்வாதியுமான உமாச்சந்திரா பிரகாஷின் ஊடாக தனக்கு அனுப்பி வைத்ததாக பேராசிரியர் ப.புஸ்பரட்ணம் தெரிவிக்கின்றார்.
இந்த செப்பு பட்டயம் ஏறத்தாழ ஐந்தடி நீளமான தூணில் பொருத்தப்பட்டுள்ளது. தூணின் தொடக்கத்திலும், முடிவிலும் அரைவட்ட தாமரை வடிவம் புடைப்புச் சிற்பமாக வடிக்கப்பட்டுள்ளது.
வலப்பக்கமாக தெலுங்கு மொழியிலும், இடப்பக்கமாக தமிழ் மொழியிலும்
தூணின் நடுப்பகுதில் முழுவடிவத்தில் வடிவமைக்கப்பட்ட தாமரை புடைப்புச் சிற்பத்திற்கு வலப்பக்கமாக தெலுங்கு மொழியிலும், இடப்பக்கமாக தமிழ் மொழியிலும் சாசனங்கள் எழுதப்பட்டிருப்பதை அவதானிக்க முடிகின்றது.
சாசனம் அக்கால மொழிவழக்கில் பின்வருமாறு எழுதப்பட்டுள்ளது:
"(1) திருமுருக்கர் ஆலியம் ஆரு (2) முக சுவாமி மூலஸ்த் (3) தானம் வெங்கப்படி (4) பலபேர் செத்து யா (5) சக தற்மம்" என முடிகின்றது. தெலுங்கு வரிவடிவத்திலும் தெலுங்கு மொழியிலும் எழுதப்பட்ட சாசனத்தைப் படிப்பதற்கு அம்மொழியில் புலமையுடைய அறிஞர்களான பேராசிரியர் வை. சுப்பராயலு, பேராசிரியர் பொ. இரகுபதி, கலாநிதி சு.இராஜகோபால் ஆகியோருக்கு சாசனத்தின் புகைப்படங்களை பேராசிரியர் ப.புஸ்பரட்ணம் அனுப்பி வைத்துள்ளார்.
அவர்கள் மூவரும் தமிழ்ச் சாசனத்தில் சொல்லப்பட்ட செய்தியையே பெரும்பாலும் அக்கால மொழிநடைக்கு ஏற்ப தெலுங்கு மொழியிலும் எழுதப்பட்டுள்ளதை உறுதிப்படுத்தியுள்ளதாக பேராசிரியர் குறிப்பிடுகின்றார்.
இரு மொழிச் சாசனங்களும் சொல்லும் செய்தி தம்பன் கடுவையில் உள்ள சித்திர வேலாயுத கோயில் கற்பக்கிரகத்தில் உள்ள மூலஸ்தானத்திற்கு வெங்கலப் படியை அமைப்பதற்கு பலரும் ஒன்று சேர்ந்து மக்களிடம் இரந்து (யாகசம் செய்து) பெற்றதை தானமாக வழங்கியது பற்றிக் கூறுகின்றன. அதன் வாசகம் பின்வருமாறு எழுதப்பட்டுள்ளது: "(1) திருமுருகா ஆலயம் ஆரு (2) முகசுவாமி மூலஸ்த் (3) தானம் வெங்கலப்படி (4) பலபேர் சேர்த்து யா (5). சக தற்மம்" என முடிகின்றது.