உக்ரைனில் சிக்கித் தவிக்கும் இந்திய மாணவர்களுக்கு உணவு வழங்கிய தமிழர்!
ரஷ்யாவின் தாக்குதலுக்கு இடையே உக்ரைனில் சிக்கித் தவிக்கும் இந்திய மாணவர்களுக்கு தமிழ்நாட்டை சேர்ந்த உணவக நிறுவனர், பிரியாணி, பாஸ்தா உள்ளிட்ட உணவுகளை வழங்கி வருகிறார்.
உக்ரைனின் மிகவும் ஆபத்தான பகுதியான கார்கிவில் அவர் செய்து வரும் சேவை, நெகிழ்ச்சியையும் வரவேற்பையும் பெற்றுள்ளது. கார்கிவ் நகரில் சுமார் 2 ஆயிரத்திற்கும் அதிகமான மாணவர்கள் தங்கியுள்ளனர்.
போர் தொடங்கிய பின்னர், பெரும்பாலான கடைகள், வணிக வளாகங்கள் உள்ளிட்டவை மூடப்பட்ட நிலையில், அங்கு 10 ஆண்டுகளுக்கும் மேலாக உணவகம் நடத்தி வரும் காஞ்சிபுரத்தை சேர்ந்த தமிழர் பாலா சங்கர், தனது குடும்பத்தினருடன் இந்திய மாணவர்களுக்கு உணவு கொடுத்து வருகிறார்.
மருத்துவ படிப்பை முடித்துள்ள பாலா சங்கருக்கு காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூரை அடுத்துள்ள குண்ணம் கிராமம்தான் பூர்வீகமாகும். உக்ரைன் பெண்ணை திருமணம் முடித்த பாலா சங்கருக்கு மாறன் என்ற 6 மாத வயது மகன் உள்ளார். ரஷ்யா தாக்குதல் நடத்த தொடங்கிய பின்னர், கார்கிவ் நகரை விட்டு வெளியேறுமாறு, அவரது மனைவி மற்றும் குடும்பத்தினர் பாலா சங்கரிடம் கூறியுள்ளனர்.
இதனை பொருட்படுத்தாது, தனது சகோதரர்கள் அப்பு கிருஷ்ணன், சுஜித் குமாருடன் இணைந்து பாலா சங்கர் இந்திய மாணவர்களுக்கு உணவு அளித்து வருகிறார். மகன் மாறனின் பெயரில் அறக்கட்டளை நடத்திவரும் பாலா சங்கர், அதன் சார்பாக 5 நாட்களுக்கும் மேலாக ஆயிரத்திற்கும் அதிகமான இந்திய மாணவர்களுக்கு பிரியாணி, பாஸ்தா உள்ளிட்ட உணவுகளை வழங்கியுள்ளார்.
மேலும் இதுகுறித்து பாலா சங்கர் கூறுகையில், 'உக்ரைனில் இருக்கும் தமிழ் சங்கத்துடன் இணைந்து பல ஆண்டுகளாக ஆதரவற்றோருக்கு உதவி செய்து வருகிறோம். உக்ரைன் எனக்கு இரண்டாவது தாய் நாட்டைப் போன்றது. எனக்கு இங்குதான் புதிய வாழ்க்கை கிடைத்தது.
எனவே, இங்குள்ளவர்களுக்கு நான் உதவ விரும்பினேன். ரஷ்யா தாக்குதல் நடத்த தொடங்கிய பின்னர் மெட்ரோ ஸ்டேஷன் போன்ற தாழ்வான பகுதிகளுக்கு சென்று இந்திய மாணவர்கள் பதுங்கிக் கொண்டனர்.
அவர்களுக்கு உணவு, தண்ணீர் கிடைக்கவில்லை என்பது எங்களுக்கு தெரியும். எனவே, அவர்களுக்கான உணவு, தண்ணீர் வசதிகளை நாங்கள் ஏற்படுத்திக் கொடுத்தோம். நாங்கள் உணவு கொண்டு செல்லும் வாகனங்களை உக்ரைன் போலீசார் மறித்து, ரஷ்ய வீரர்கள் யாரேனும் உள்ளனரா என்று சோதிப்பார்கள்.
குண்டுவீச்சு நடக்கும்போதெல்லாம் உணவு வாகனம் சென்ற சம்பவங்களும் உண்டு. வாட்ஸ்ஆப் மூலம் நாங்கள் இந்த சேவையை செய்தோம். ஆனால் மாணவர்களிடம் உணவை வழங்குவது என்பது எளிதான வேலை கிடையாது.
எங்கள் வாகனத்தை உக்ரைன் போலீசார் எச்சரித்து பல முறை திருப்பி அனுப்பியுள்ளார்கள். நிலைமை மிக மோசமாக இருப்பதால் உக்ரைன் போலீசாரால் அப்படித்தான் நடந்து கொள்ள முடியும்.
கார்கிவிற்கு வெளியே உள்ள நகரங்களில் உணவுக்கு தேவையான பொருட்களை வாங்கி சமையல் செய்கிறோம்.' என்றார். பாலா சங்கர் மற்றும் அவரது குழுவினரால் இன்னும் எத்தனை நாட்களுக்கு இதுபோன்ற உதவிகளை செய்ய முடியும் என்பதை உறுதி அளிக்க முடியாது.
உணவுப் பொருட்களை தவிர்த்து, சானிட்டரி நாப்கின் போன்ற அத்தியாவசிய பொருட்களும் மாணவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.