கனடாவில் டாக்ஸி சாரதி கொலையில் அதிரடி திருப்பம்: வெளிவரும் தகவல்
கனடாவில் 73 வயது டாக்ஸி சாரதி சுட்டுக்கொல்லப்பட்ட வழக்கில் தலைமறைவாக இருந்த 17 வயது இளைஞர் கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த இளைஞர் மீது இரண்டாம் நிலை கொலை வழக்கு பதியப்பட்டுள்ளதாக ரொறன்ரோ பொலிசார் தெரிவித்துள்ளனர்.
மேலும், இந்த கொலை வழக்கு தொடர்பில் கனடா முழுவதிலும் தீவிர தேடுதல் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டு வந்தது. இந்த நிலையில், வெள்ளிக்கிழமை ரொறன்ரோ பொலிசார் வெளியிட்ட தகவலில், ஜனவரி 28ம் திகதி பிரிட்டிஷ் கொலம்பியாவில் தொடர்புடைய இளைஞர் பொலிசாரிடம் சிக்கியதாக குறிப்பிட்டுள்ளனர்.
இதனையடுத்து ரொறன்ரோ பொலிசார் பிரிட்டிஷ் கொலம்பியாவுக்கு விரைந்து, குறித்த இளைஞரை காவலில் எடுத்துக்கொண்டுள்ளனர். மட்டுமின்றி, உரிய முறைப்படி ரொறன்ரோவுக்கும் அழைத்து வந்துள்ளனர்.
இளையோர் குற்றவியல் சட்டத்தின் கீழ் குறித்த இளைஞரின் பெயர் உள்ளிட்ட தகவல்களை வெளியிட முடியாது என ரொறன்ரோ பொலிஸ் தரப்பு தெரிவித்துள்ளது.
கடந்த ஆண்டு அக்டோபர் 24ம் திகதி கார் ஒன்று தடுப்பு வேலியில் மோதி விபத்துக்குள்ளானதாக பொலிசாருக்கு தகவல் கிடைத்துள்லது. தகவலையடுத்து சம்பவப்பகுதிக்கு விரைந்த பொலிசார், வாடகை டாக்ஸி சாரதி ஒருவரை துப்பாக்கி குண்டு காயங்களுடன் உயிருக்கு ஆபத்தான நிலையில் மீட்டுள்ளனர்.
ஆனால் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் அவர் மரணமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டது. மரணமடைந்த அந்த சாரதியின் பெயர் Christopher Jung எனவும் அவருக்கு 73 வயது எனவும் தெரியவந்தது.
தற்போது இந்த வழக்கில் கைதாகியுள்ள 17 வயது இளைஞரிடம் கொலைக்கான பின்னணி தொடர்பில் விசாரிக்கப்படும் என பொலிசார் தெரிவித்துள்ளனர்.