வாகனத்தில் வந்த நபரால் பாடசாலை சிறுமிக்கு நேர்ந்த துயரம்: சக மாணவர்களால் மீட்பு
பாடசாலையில் இருந்து குடியிருப்புக்கு திரும்பிய மாணவி ஒருவரை வாகனத்தில் குறுக்கிட்ட நபர் வலுக்கட்டாயமாக அழைத்துச் செல்ல முயன்ற சம்பவம் வின்னிபெக் பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
குறித்த சம்பவம் தொடர்பில் பொதுமக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என வின்னிபெக் பொலிசார் கேட்டுக்கொண்டுள்ளனர்.
வின்னிபெக் நகரின் Valley Gardens பகுதியிலேயே புதன்கிழமை குறித்த அதிர்ச்சி சம்பவம் நடந்துள்ளது. சுமார் 3.40 மணியளவில் இந்த விவகாரம் தொடர்பில் பொலிசாருக்கு தகவல் கிடைத்துள்ளது.
இதனையடுத்து சம்பவம் நடந்த கான்கார்டியா அவென்யூ மற்றும் மோல்சன் தெரு சந்திப்புக்கு பொலிசார் விரைந்துள்ளனர்.
முதற்கட்ட விசாரணையில், குறித்த பாடசாலை மாணவி குடியிருப்புக்கு திரும்பும் வழியில், அவரை கடந்து ஒரு வாகனம் சென்றுள்ளது. அப்போது அந்த வாகனத்தின் சாரதி மாணவியை பார்த்து கை அசைத்துவிட்டு சென்றுள்ளார்.
ஆனால் அடுத்த சில நிமிடங்களிலேயே அந்த வாகனம் திரும்பி வந்ததுடன், குறித்த மாணவியிடம் அந்த சாரதி, குடியிருப்பில் கொண்டு சேர்க்கிறேன் வர முடியுமா எனவும் வினவியுள்ளார்.
ஆனால் அதற்கு மறுப்பு தெரிவித்த மாணவியை அந்த நபர் வலுக்கட்டாயமாக அழைத்துச் செல்ல முயன்றுள்ளார். இச்சம்பவத்தை நேரில் பார்த்த எஞ்சிய மாணவர்கள் சத்தமிட, அந்த நபர் மாணவியை விட்டுவிட்டு அங்கிருந்து மாயமாகியுள்ளார்.
சுமார் 30 முதல் 40 வயதுக்கு உட்பட்ட அந்த நபர் பழுப்பு நிற முடி மற்றும் பழுப்பு நிற மீசையுடன் காணப்பட்டார். தற்போது இந்த வழக்கை சிறார் துஷ்பிரயோக தடுப்பு பொலிசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
பொதுமக்களில் எவருக்கேனும் இந்த வழக்கு தொடர்பில் தகவல் தெரிய வந்தால் உடனடியாக பொலிசாரை நாடவும் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.