இளைஞருக்கு தவறான தடுப்பூசி: மன்னிப்பு கோரிய ரொறன்ரோ மருத்துவமனை
ரொறன்ரோவில் 15 வயது இளைஞருக்கு தவறான தடுப்பூசி டோஸ் அளிக்கப்பட்ட விவகாரத்தில் தொடர்புடைய மருத்துவமனை மன்னிப்பு கேட்டுள்ளது.
மைக்கேல் கரோன் மருத்துவமனை சார்பில் Warden Hilltop சமூக மையத்தில் செவ்வாய்க்கிழமை தடுப்பூசி போட்டுக்கொண்ட Rakin Choudhury என்பவரே தமக்கு ஏற்பட்ட சம்பவத்தை வெளிப்படுத்தியுள்ளார்.
தமது தந்தை மற்றும் இரு சகோதரர்களுடன் செவ்வாய்க்கிழமை தொடர்புடைய தடுப்பூசி அளிக்கப்படும் மையத்திற்கு சென்றுள்ளார். 15 வயதேயான Rakin Choudhury-கு பைஸர் தடுப்பூசி வழங்கப்பட வேண்டும்.
கனேடிய சுகாதார துறையால் குறித்த தடுப்பூசி மட்டுமே அனுமதிக்கப்பட்டுள்ளது. ஆனால் சம்பவத்தன்று Rakin Choudhury-கு மாடர்னா தடுப்பூசி போடப்பட்டுள்ளது.
தமக்கு போடப்பட்ட தடுப்பூசி தொடர்பில் எழுத்துப்பூர்வ உறுதிப்படுத்தல் கிடைத்த நிலையிலேயே நடந்த தவறை அவர் கண்டறிந்துள்ளார். ஆனால் அவரது சகோதரர்கள் இருவருக்கும் பைஸர் தடுப்பூசியே போடப்பட்டுள்ளது.
இதனையடுத்து ஏற்பட்ட தவறை சுட்டிக்காட்டி தொடர்புடைய மருத்துவமனையை Choudhury குடும்பம் நாடியுள்ளது. தடுப்பூசி மாறிய நிலையிலும் பாதிப்பு ஏதும் இல்லை என்பதை உறுதி செய்துள்ள மருத்துவமனை,
நடந்த தவறுக்கு மன்னிப்பு கோரியுள்ளது.
மேலும், இதுபோன்ற தவறு எதிர்காலத்தில் நடக்காதவாறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் எனவும் உறுதி அளித்துள்ளனர்.