நண்பர்கள் மத்தியில் இளைஞருக்கு ஏற்பட்ட துயரம்: ரொறன்ரோ பொலிசார் விசாரணை
ஸ்கார்பரோ பகுதியில் பட்டப்பகலில் இளைஞர் ஒருவர் துப்பாக்கியால் சுடப்பட்டு பலியான சம்பவத்தில் ரொறன்ரோ பொலிசார் விசாரணை முன்னெடுத்துள்ளனர்.
கென்னடி சாலை மற்றும் பிரதான சாலை 401 அருகாமையில் இருந்து பொலிசாருக்கு மாலை 6 மணியளவில் இச்சம்பவம் தொடர்பில் தகவல் கிடைத்துள்ளது.
தகவலை அடுத்து சம்பவப்பகுதிக்கு விரைந்த பொலிசார், துப்பாக்கி குண்டு காயங்களுடன் உயிருக்கு போராடும் இளைஞர் ஒருவரை மீட்டுள்ளனர்.
ஆனால் அவசர மருத்துவ உதவிக்குழுவினரின் உதவியுடன் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில், அந்த இளைஞர் காயங்கள் காரணமாக மரணமடைந்தார் என பொலிஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மரணமடைந்த நபர் உறவினர்களால் அடையாளம் காணப்படும் வரையில், அவர் தொடர்பில் ஊடகங்களுக்கு தகவல் வெளியிட பொலிசார் மறுத்துள்ளனர்.
முதற்கட்ட விசாரணையில், மரணமடைந்த இளைஞர் சம்பவத்தின் போது, சாலை அருகாமையில் நண்பர்களுடன் உரையாடியபடி இருந்துள்ளார். திடீரென்று அவர்கள் அருகாமையில் வந்து நின்ற ஒரு காரில் இருந்து குறித்த இளைஞரை மர்ம நபர்கள் துப்பாக்கியால் சுட்டதாக தெரிய வந்துள்ளது.
இதனிடையே அந்த இளைஞர் காயங்களுடன் கொஞ்ச தூரம் ஓடியுள்ளார். அந்த காருக்குள் எத்தனை பேர்கள் இருந்தார்கள் என்பது தொடர்பில் தகவல் இல்லை.
மேலும் அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கெமரா காட்சிகளை சேகரித்துள்ளதாகவும், விசாரணை சரியான பாதையில் செல்வதாகவும் பொலிஸ் தரப்பு தெரிவித்துள்ளது.
சம்பவத்தின் போது இளைஞருடன் காணப்பட்ட அவரது நண்பர்களிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருவதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.