இந்தியா - பாகிஸ்தான் இடையே பதற்றங்கள் ; 36 மணிநேர கெடு; பாகிஸ்தான் அமைச்சர்
அடுத்த 24 முதல் 36 மணி நேரத்துக்குள் இந்தியா இராணுவத் தாக்குதலை நடத்த திட்டமிடுவதாக தங்கள் உளவுத்துறை எச்சரித்துள்ளதாக பாகிஸ்தானின் தகவல் தொடர்புத்துறை அமைச்சர் அத்தாவுல்லா தரார் தெரிவித்துள்ளார்.
ஏப்ரல் 22ஆம் திகதி பஹல்காமில் பயங்கரவாதிகளால் 26 பேர் சுட்டுக்கொலை செய்யப்பட்டதிலிருந்து இந்தியா - பாகிஸ்தான் இடையே பதற்றங்கள் அதிகரித்து வருகின்றன.
இந்தியா இராணுவத் தாக்குதலை நடத்தத் திட்டம்
இராணுவத் தளபதிகளுடன் ஆலோசனை நடத்திய இந்தியப் பிரதமர் மோடி, பதிலடி கொடுக்க இராணுவத்துக்கு முழு சுதந்திரம் வழங்கியுள்ளதாக இந்திய அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இந்நிலையிலேயே அடுத்த 24 முதல் 36 மணி நேரத்துக்குள் இந்தியா இராணுவத் தாக்குதலை நடத்தத் திட்டமிடுவதாக தங்கள் உளவுத்துறை எச்சரித்துள்ளதாக பாகிஸ்தானின் தகவல் தொடர்புத்துறை அமைச்சர் அத்தாவுல்லா தரார் தெரிவித்துள்ளார்.
பஹல்காம் சம்பவத்தில் பாகிஸ்தானின் தொடர்பு குறித்து இந்தியா புனையப்பட்ட மற்றும் ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை முன்வைப்பதாகவும், இராணுவ ஆக்கிரமிப்பை நியாயப்படுத்த இந்தக் கூற்றுக்களை முன்வைப்பதாகவும் அவர் மேலும் குற்றஞ்சாட்டியுள்ளதுடன் பாகிஸ்தானும் பயங்கரவாதத்தால் பாதிக்கப்பட்ட நாடு தான் என்றும், இந்தியாவின் குற்றச்சாட்டுகளை தான் மறுப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
அதேவேளை பஹல்காம் தாக்குதல் குறித்து நடுநிலையான ஆணைக்குழு மூலம் நம்பகமான மற்றும் வெளிப்படையான விசாரணைக்கு பாகிஸ்தான் ஒத்துழைப்பதாக கூறியபோதிலும், இந்தியா மோதலுக்கான வழியை தெரிவு செய்துள்ளது என்று அவர் மேலும் கூறியுள்ளார்.