நைஜீரியாவில் பயங்கரவாதிகள் ஆட்டுழியம்: 300-க்கும் மேற்பட்ட பள்ளிமாணவிகள் கடத்தல்!
நைஜீரியாவில் பள்ளிமாணவிகள் 300-க்கும் மேற்பட்டோரை பயங்கரவாதிகள் கடத்திச்சென்றுள்ளனர். நைஜீரியாவில் அல்கொய்தா, ஐ.எஸ், பண்டிட்ஸ், போகோ ஹராம் உள்பட பல்வேறு பயங்கரவாத குழுக்கள் ஆதிக்கம் செலுத்தி வருகின்றன. இந்த பயங்கரவாத குழுக்களை அழிக்கும் நடவடிக்கையில் அந்நாட்டு பாதுகாப்பு படையினர் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த மோதலில் பொதுமக்கள், பாதுகாப்பு படையினர், பயங்கரவாதிகள் என ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்துள்ளனர். இதற்கிடையில், பயங்கரவாதிகள் அவ்வப்போது பள்ளிக்கூடங்களுக்குள் நுழைந்து அங்கு கல்வி பயின்று வரும் மாணவமாணவிகளை கடத்தி சென்று அவர்களை பயங்கரவாத செயல்களுக்கும், பிணைகைதிகளாகவும் பயன்படுத்தி வருகின்றனர்.
இந்நிலையில், அந்நாட்டின் வடகிழக்கு பகுதியின் சம்ஃபரா மாகாணத்தில் உள்ள ஒரு பள்ளிக்கூடத்தில் பயிலும் மாணவிகள் தங்குவதற்கான விடுதி பள்ளிக்கூடத்திற்கு அருகே அமைந்துள்ளது. அந்த விடுதிக்குள் இன்று ஆயுதங்களுடன் நுழைந்த பண்டிட்ஸ் பயங்கரவாதிகள் குழுவினர் அங்கு தங்கி இருந்த பள்ளிமாணவிகள் 300-க்கும் மேற்பட்டோரை கடத்திச்சென்றுள்ளனர்.
பள்ளிமாணவிகள் கடத்தப்பட்ட சம்பவத்தை சம்ஃபரா மாகாண கவர்னரின் செய்தித்தொடர்பாளர் ஜிலானி பப்பா உறுதி செய்துள்ளார். இந்த விவகாரம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.