காபூல் விமான நிலையத்தில் இந்தியர்கள் கடத்தப்பட்டனரா...மறுத்த தலிபான்கள்
காபூல் விமான நிலையத்திலிருந்து 150 இந்தியர்கள் கடத்தப்பட்டதாக வெளியான செய்திக்கு தலிபான்கள் மறுப்பு தெரிவித்துள்ளனர்.
ஆப்கானிஸ்தானில் தலீபான்கள் ஆட்சியை கைப்பற்றிய நிலையில், அங்கிருந்து உள்நாட்டினரும், வெளிநாட்டினரும் தப்பித்துச் செல்ல முயன்று வருகிறார்கள். கடந்த செவ்வாய்க்கிழமை, ஆப்கானிஸ்தானுக்கான இந்திய தூதர் ருத்ரேந்திர டாண்டன் உள்பட 150 இந்தியர்கள் விமானத்தில் அழைத்து வரப்பட்டனர்.
இன்னும் ஏராளமான இந்தியர்கள் ஆப்கானிஸ்தானில் சிக்கித்தவித்து வருகிறார்கள். வணிகரீதியான விமான போக்குவரத்து தொடங்கிய பிறகு அவர்களை அழைத்துவர மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இதற்கிடையே, ஆப்கானிஸ்தானில் உள்ள இந்தியர்களுக்கு உதவ சிறப்பு பிரிவு ஒன்றை மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் உருவாக்கி உள்ளது.தாயகம் திரும்புவது மற்றும் இதர உதவிகளுக்காக அந்த சிறப்பு பிரிவை தொடர்பு கொள்ளுமாறு கூறியுள்ளது.
மேலும், ஏற்கனவே வெளியிடப்பட்ட தொலைபேசி எண்களுடன் கூடுதலாக தொலைபேசி எண்களையும், வாட்ஸ்அப் எண்களையும், மின்னஞ்சல் முகவரிகளையும் வெளியிட்டுள்ளது.
காபூலில் உள்ள ஹமீத் கர்சாய் சர்வதேச விமான நிலையத்திற்கு அருகில் இருந்து 150 க்கும் மேற்பட்டவர்களை தலிபான்கள் அழைத்துச் சென்றனர், பிடிபட்டவர்களில் ஆப்கானிஸ்தானியர்கள் மற்றும் ஆப்கானிய சீக்கியர்கள் அடங்குவர், ஆனால் அவர்களில் அதிகமானோர் இந்திர்கள் ஆவார்கள்.
ஆனால் இதனை தலீபான்கள் மறுத்து உள்ளனர்.இதனை தலீபான்கள் செய்தி தொடர்பாளர் அகமதுல்லா வாசிக் மறுத்துள்ளார்.