குழந்தை சாப்பிட்ட அந்த பொருள்... உயிரைப் பிடித்துக்கொண்டு மருந்துக்காக 56 மணி நேரம் ஓடிய பெற்றோர்
ஆல்பர்ட்டாவில் ஒரு குழந்தை தன் தோட்டத்தில் கிடந்த ஒரு பொருளை எடுத்து சாப்பிட்டுவிட, அதற்கான மருந்தை கண்டுபிடிக்க அந்த குழந்தையின் பெற்றோர் 56 மணி நேரம் ஓடிய விடயம் ஒன்று கவனம் ஈர்த்துள்ளது.
Jon Martin, Ashley Haughton தம்பதியரின் மகனான ஒரு வயது குழந்தை, தங்கள் தோட்டத்தில் கிடந்த அந்த பொருளை எடுத்து சாப்பிட்டுவிட்டான். அது, ரக்கூன் என்னும் ஒரு விலங்கின் எச்சம்... பிரச்சினை என்னவென்றால், அந்த விலங்கின் எச்சத்தில் Baylisascaris procyonis என்னும் உருளைப்புழுவும், அதன் முட்டைகளும் எக்கச்சக்கமாக இருக்கும்.
அந்த புழுவின் முட்டைகள் உடலுக்குள் சென்றால், அவற்றிலிருந்து வெளிவரும் லார்வாக்கள் உடல் முழுவதும் சென்றுவிடும். கண்கள் முதல் மூளை வரை அத்தனை உறுப்புகளுக்குள்ளும் அவை நுழைந்துவிடும்.
ஆக, மூளைச்சேதம், கண் பார்வை இழப்பு மற்றும் கோமா என்னும் பயங்கர விளைவுகள் ஏற்படலாம். எல்லாவற்றிற்கும் மேல், மரணம் நிகழவும் வாய்ப்புள்ளது.
மூன்று நாட்களுக்குள் முறையான சிகிச்சை அளிக்காவிட்டால் உள்ளூக்குள்ளிருந்தே மனித திசுவைத் தின்றுவிடும் அந்த புழுக்கள். பிள்ளையைத் தூக்கிக்கொண்டு உடனடியாக மருத்துவமனைக்கு சென்றுள்ளார்கள் பெற்றோர். ஆனால், அங்கே அவர்களுக்கு ஒரு ஏமாற்றம் காத்திருந்தது. அங்கே மட்டுமல்ல, ஆல்பர்ட்டா முழுவதுமே அந்த மருந்து கிடைக்கவில்லை! இதற்கிடையில், அந்த பெற்றோர் இன்னொரு புத்திசாலித்தனமான வேலையையும் செய்தார்கள், அந்த விலங்கின் எச்சத்தையும் அவர்கள் சோதனைக்காக அனுப்பியிருந்தார்கள்..
முடிவு மோசமாக வந்தது. ஆம், அந்த எச்சம் முழுவதுமே எக்கச்சக்கம் புழுக்களும் முட்டைகளும் இருப்பதை ஆய்வகம் உறுதி செய்தது. வெவ்வேறு மாகாணங்களுக்கு தகவலனுப்பியும் ஒருவரிடமும் அந்த மருந்து கிடைக்கவில்லை.
சில மருந்தக ஊழியர்கள் குழந்தையின் நலனை கருத்தில் கொண்டு தாங்களே அந்த மருந்தை தயாரிக்கக்கூட முயற்சித்திருக்கிறார்கள். கடைசியாக, அமெரிக்காவுக்கு செல்ல குழந்தையின் பெற்றோர் முடிவு செய்த நேரத்தில், கால்கரியில் மருந்து இருப்பதாக ஒரு தகவல் வர, 56 மணி நேரத்துக்குப் பின் குழந்தைக்கு மருந்து கொடுக்கப்பட்டுவிட்டது.
இனி அவனுக்கு ஆபத்து எதுவும் இல்லை.
ஆனால், இதில் பாராட்டப்படவேண்டிய விடயம் என்னவென்றால், அந்த குழந்தைக்கு பிரச்சினை என்றதும், அதைக் காப்பாற்றும் முயற்சியில் அத்தனை மருத்துவர்கள், மருந்துக்காக முயற்சி செய்த மருந்தக ஊழியர்கள் என ஒரு குழுவே இறங்கி வேலை செய்ததுதான்!