பெற்றோரின் மூட நம்பிக்கையால் சிறுவன் ஒருவன் பரிதாப பலி
இலங்கையில் பெற்றோரின் மூட நம்பிக்கையால் சிறுவனின் உயிர் பலியான சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.
படல்கமுவ பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஆதிமுல்ல பிரதேசத்தில் வீட்டின் அறையொன்றில் 10 வயது சிறுவன் சடலமாக மீட்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
அந்த பகுதி முழுவதும் துர்நாற்றம் வீசியமை தொடர்பில் பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டையடுத்து குறித்த வீட்டை சோதனையிட்டதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
இதன்படி கடந்த 7ஆம் திகதி குறித்த சிறுவனின் தொண்டையில் சளி சிக்கியதால் சுகயீனமுற்றுள்ளதாகவும், நோய் குணமடைவதற்காக பெற்றோர்கள் மத வழிபாடுகளில் ஈடுபட்டதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
இவ்வாறு மத வழிபாடுகளின் போது சிறுவன் உயிரிழந்துள்ளமை தெரியவந்துள்ளது. பெற்றோர்கள் அந்த சிறுவனின் உயிர் மீட்கப்பட வேண்டும் என்று தொடர்ந்து பிரார்த்தனை செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
குறித்த சம்பவம் தொடர்பில் வீட்டில் இருந்த தாய், தந்தை மற்றும் பாட்டி ஆகியோரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
மேலும் சம்பவம் தொடர்பில் நீர்கொழும்பு நீதவான் நீதிமன்றில் அறிவிக்கப்படவுள்ளதுடன் பிரேத பரிசோதனை ஆரம்பிக்கப்படவுள்ளது.