பிரான்ஸை அதிர வைத்த ஐ.எஸ். பயங்கரவாதிக்கு ஆயுள் தண்டனை!
பாரிஸ் நகரில் கடந்த 2015 நவம்பர் மாதம் நடத்தப்பட்ட தாக்குதலில் உயிர் தப்பிய ஒரே ஒரு தாக்குதல்தாரி மீதான பயங்கரவாத மற்றும் கொலைக் குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டுள்ள நிலையில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
130 பேர் கொல்லப்பட்ட துப்பாக்கி மற்றும் வெடிகுண்டுகளைக் கொண்டு நடத்தப்பட்ட தாக்குதல்களில் சலாஹ் அப்தஸ்லாமின் செயலுக்காக அவருக்கு மிக அரிதாக வழங்கப்படும் முழுமையான ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
புதன்கிழமை வழங்கப்பட்ட தீர்ப்பில் இந்தத் தாக்குதலுடன் தொடர்புபட்ட மேலும் 19 பேர் குற்றங்காணப்பட்டனர். இவர்களில் ஆறு பேர் உயிரிழந்துவிட்டதாக நம்பப்படுகிறது. கடந்த செப்டெம்பர் மாதம் ஆரம்பிக்கப்பட்ட இந்த வழக்கு விசாரணை நவீன பிரான்ஸ் வரலாற்றில் மிகப்பெரிய வழக்காகப் பார்க்கப்பட்டது.
கடந்த 2015 நவம்பர் 13 ஆம் திகதி மதுபானச்சாலைகள், விடுதிகள், தேசிய கால்பந்து அரங்கு மற்றும் படக்லான் இசை அரங்கில் இடம்பெற்ற இந்தத் தாக்குதல்களில் நூற்றுக்கணக்கானவர்கள் காயமடைந்திருந்தனர்.
வழக்கு விசாரணையின் ஆரம்பத்தில் தம்மை இஸ்லாமிய அரசுக் குழுவின் படை வீரர் என்று வர்ணித்த அப்தஸ்லாம் பின்னர் பாதிக்கப்பட்டவர்களிடம் மன்னிப்புக் கேட்டதோடு, தாம் ‘கொலைகாரன் இல்லை என்று வாதிட்டார்.
தாக்குதல் நடந்த இரவில் தாம் தற்கொலை அங்கியை வெடிக்கச் செய்யாமல் இருக்க தீர்மானித்ததாகவும் அதனை பாரிஸ் புறநகர் பகுதி ஒன்றில் வீசிவிட்டதாகவும் வழக்கு விசாரணையில் அவர் குறிப்பிட்டிருந்தார்.
இந்நிலையில் முழு ஆயுள் தண்டனை என்பது 30 ஆண்டுகளுக்கு பின்னர் நன்னடத்தை பிணையில் வெளியே வர மிகக் குறைந்த வாய்ப்பே உள்ளதாகும்.
இது பிரான்ஸில் குற்றவாளிகளுக்கான மிகக் கடுமையான தண்டனையாகும். அந்நாட்டு நீதிமன்றம் ஒன்று இவ்வாறான தீர்ப்பை வழங்குவது மிக அரிதாகும்.