குடியிருப்பு பகுதியில் விழுந்து நொருங்கிய விமானம்; 3 பேர் பலி
அமெரிக்காவில் குடியிருப்பு பகுதியில் குட்டி விமானம் ஒன்று விழுந்து நொருங்கியதில் 3 பேர் பலியாகியுள்ளனர். அமெரிக்காவின் ஜார்ஜியா மாகாணம் கெயின்ஸ்வில்லே நகரிலுள்ள விமான நிலையத்தில் இருந்து ஒற்றை என்ஜின் கொண்ட குட்டி விமானம் ஒன்று புறப்பட்டது.
புளோரிடா மாகாணத்தின் டேடோனா கடற்கரை நோக்கி புறப்பட்ட இந்த விமானத்தில் விமானி உட்பட 3 பேர் பயணம் செய்தனர். கெயின்ஸ்வில்லே விமான நிலையத்திலிருந்து கிளம்பிய சில நிமிடங்களிலேயே விமானம் திடீரென விமானியின் கட்டுப்பாட்டை இழந்தது.
இதனால் விமானி விமான நிலையம் அருகேயுள்ள சாலையில் விமானத்தை அவசரமாக தரையிறக்க முயற்சித்தபோதும் அவரது கட்டுக்குள் வராத விமானம் விமான நிலையத்தையொட்டிய குடியிருப்பு பகுதியில் விழுந்து நொறுங்கியது.
இந்த விபத்தில் விமானத்தில் பயணம் செய்த 3 பேரும் சம்பவ இடத்திலேயே பலியாகினர்.
மேலும் இந்த விபத்துக்கான காரணம் என்ன என்பது உடனடியாக தெரியாத நிலையில் இது குறித்து தீவிர விசாரணை நடந்து வருகிறது.