ஜெர்மனி செல்ல ஆசைப்பட்ட தமிழக இளைஞனுக்கு நேர்ந்த நிலை!
ஜெர்மனி செல்லும் ஆசையால் பெரும் தொகை பணத்தை இழந்த தமிழக இளைஞன் தொடர்பில் எச்சரிக்கை தகவலொன்று வெளியாகியுள்ளது.
இந்நிலையில் ஜெர்மனி நாட்டில் வேலை வாங்கி தருவதாக கூறி ஓசூர் வாலிபரிடம் 6 லட்சம் ரூபாய் மோசடிசெய்த நபர் குறித்து சைபர் கிரைம் பொலிஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
சம்பவம் குறித்து தெரியவருகையில் , கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் சிப்காட் பகுதியை சேர்ந்த 37 வயதான ரொபர்ட் லோரன்ஸ் என்பவரே மோசடியாளர்களால் இவ்வாறு ஏமாற்றப்பட்டுள்ளார். ரொபர்ட் லோரன்ஸ் பெங்களூரில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார்.
இந்த நிலையில் அவரது கையடக்க தொலைபேசிக்கு அடையாளம் தெரியாத நபரிடம் இருந்து அழைப்பு வந்தது. அழைப்பில் வந்தவர் ஜெர்மனி நாட்டில் 85 ஆயிரம் ரூபாய் சம்பளத்துக்கு வேலை தயாராக இருப்பதாக ஆசை காட்டினார்.
அவரது பேச்சை நம்பிய ரொபர்ட் லோரன்ஸ், தொலைபேசி அழைப்பை எடுத்தவரிடம் தொடர்ந்து பேசினார். அப்போது நுழைவு கட்டணமாக( இந்திய ரூபாயில் ) 5 லட்சத்து 96 ஆயிரம் ரூபாய் பணம் கட்டணமாக கட்ட வேண்டும் என்று தெரிவித்தார்.
இதையடுத்து ரொபர்ட் லோரன்ஸ், அவரது வங்கி கணக்குக்கு 5.96 லட்சம் ரூபாய் பணத்தை செலுத்தியபின்னர் அந்த மர்ம நபர் , தொடர்பு கொள்ளவில்லை.
இதனையடுத்து தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த ரொபர்ட் லோரன்ஸ் ,கிருஷ்ணகிரி சைபர் கிரைம் பொலிஸாரிடம் முறைப்பாடு செய்தார். அதன்பேரில் கிருஷ்ணகிரி சைபர் கிரைம் பொலிஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.