உக்ரைன் அணுமின் நிலையம் மீது பார்வையை திருப்பும் ஐ.நா!
உக்ரைன் மீதான ரஷ்யாவின் படையெடுப்பு தொடர்ந்து ஆறாவது மாதமாக நீடித்து வருகிறது.
கடந்த பிப்ரவரி 24-ஆம் திகதி தொடங்கிய இந்த படையெடுப்பில் இதுவரை ஆயிரக்கணக்கானோர் கொல்லப்பட்டதுடன், பல லட்சக்கணக்கானோர் உக்ரைனை விட்டு வெளிநாடுகளில் தஞ்சம் புகுந்துள்ளனர்.
மேலும், ஐரோப்பாவின் மிக பெரிய அணுமின் நிலையமாக உக்ரைனில் உள்ள ஜபோரிஜியா அணுமின் நிலையம் உள்ளது. இந்த அணுமின் நிலையத்தை ரஷ்யா ஆக்கிரமித்துள்ளது.
இதன் அருகே உள்ள ஆயுத கிடங்குகள் மீது ரஷ்ய படை தாக்குதல் நடத்தி வருகிறது. உக்ரைனில் உள்ள ஜபோரிஜியா அணுமின் நிலையத்தில் நடத்தப்பட்ட தாக்குதலில் ஏற்பட்ட தீவிர சேதத்தினால் ஒரு உலை மூடப்பட்டது. மேலும், ஹைட்ரஜன் மற்றும் கதிரியக்க பொருட்கள் கசிவு ஏற்பட வாய்ப்பு உள்ளதாக ஐரோப்ப நாடுகள் கவலை அடைந்துள்ளன.
ஐ.நா.வின் சர்வதேச அணுசக்தி ஆய்வாளர்கள்
இந்த நிலையில், ஐ.நா.வின் சர்வதேச அணுசக்தி ஆய்வாளர்கள் குழு ஜபோரிஜியா அணுமின் நிலையத்தின் நிலையை அறிய சென்றுள்ளனர்.
சர்வதேச அணுசக்தி முகமை அமைப்பின் தலைவர் ரபேல் கிராஸி(Raphael Grassi) கூறுகையில், ஐரோப்பாவின் மிகப்பெரிய அணுமின் நிலையத்தை கண்காணிக்க உக்ரைனில் ஒரு நிரந்தர குழுவை அமைக்கப்படும் என நம்புகிறேன்.
இது மிகவும் சிக்கலான செயலாகும். நாங்கள் போர் பகுதிக்கு செல்கிறோம். நாங்கள் ஆக்கிரமிக்கப்பட்ட பகுதிக்கு செல்கிறோம்.
இதற்கான உத்திரவாதம் ரஷ்யாவிடம் மட்டுமல்ல, உக்ரைனிடம் இருந்தும் தேவைப்படுகிறது என்று அவர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.