இத்தாலி நாட்டின் சிறப்பம் சங்களை அனுபவத்துடன் கூறிய பெண்மணி!
இத்தாலி ஏனைய ஐரோப்பிய நாடுகளை விட மாறுபடுகிறது பொதுமக்கள் பெருநகரங்களில் நீண்ட நேரம் வெளியே உணவகங்களிலும் சந்தைகளிலும் நடமாடுபவர்கள்.
மக்கள் இயல்பாக சத்தமாக பேசுபவர்கள். ஜெர்மனியுடன் ஒப்பிடும்போது இது மாறுபட்ட ஒரு குணாதிசயம் என தாராளமாகச் சொல்லலாம். பொதுமக்கள் மட்டுமின்றி இத்தாலியின் பெருநகரங்கள் அனைத்துமே சுற்றுப் பயணிகளால் நிரம்பி வழிகிறது.
அதிலும் குறிப்பாக கோடை காலம் என்பதால் மக்கள் கூட்டம் அலைமோதுகிறது. இன்று ஒரு நாள் முழுமையாக வாட்டிகன் சிட்டி நாட்டில் பொழுது கழிந்தது.
காலையில் போப்பாண்டவர் பொதுமக்களுக்குக் காட்சியளிக்கும் சிறப்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டோம். எனது பட்டியலில் நீண்டநாள் விடுப்பட்டிருந்த வாட்டிகன் அருங்காட்சியகத்திற்கு இன்று நேரில் சென்று எல்லா அரும் பொருட்களையும் நேரம் எடுத்துப் பார்த்து ரசிப்பதற்கும் குறிப்புகள் எடுத்துக் கொள்வதற்கும் வாய்ப்பு கிடைத்தது.
வாட்டிகனின் மிக முக்கியத்துவம் பெற்ற சிஸ்டின் சாப்பல் பகுதிக்குச் சென்று அந்த தேவாலயத்தின் அனைத்து சுவர்களையும் அலங்கரித்து இருக்கும் இத்தாலியின் ரெனைசான்ஸ் காலத்து கலை சிற்பிகளின் கைவண்ணத்தைக் கண்டு மகிழ முடிந்தது.
குறிப்பாக மைக்கலாஞ்சலோ, ரஃபேல் ஆகியோரின் கலைப்படைப்புகள் பிரமிக்க வைக்கின்றன. இந்தப் பட்டியலில் வாட்டிகன் தேவாலயத்தையும் விட்டுவிட முடியாது அல்லவா? அதற்கும் நேரில் சென்று அதன் பிரம்மாண்டத்தை நேரில் கண்டது மனநிறைவாக உள்ளது.
வாட்டிகன் சிட்டி நாட்டிற்கு என்று தனியாக பிரத்தியேக காவல்படை உள்ளது. ஆயினும் கூட நீண்ட பாரம்பரியமாக சுவிட்சலாந்தில் இருந்து சுவிஸ் கார்ட்ஸ் எனச் சொல்லப்படும் பிரத்தியேக காவல்படையும் போப் ஆண்டவருக்கு பாதுகாப்பு அளிக்கும் பணியை மேற்கொண்டுள்ளது.



